| 1 |
ஆறு அறி அந்தணர்க்கு, அருமறை பல பகர்ந்து, தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்துக், கூறாமல் குறித்ததன் மேல் செல்லும், கடும் கூளி, மாறாப் போர் மணி மிடற்று எண் கையாய்! கேள் இனி; படு பறை பல இயம்பப், பல் உருவம் பெயர்த்து நீ கொடுகொட்டி ஆடும்கால், கோடு உயர் அகல் அல்குல் கொடிபுரை நுசுப்பினாள், கொண்ட சீர் தருவாளோ? மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து, பண்டரங்கம் ஆடும்கால், பணை எழில் அணை மென்தோள் வண்டு அரற்றும் கூந்தலாள், வளர் தூக்கு தருவாளோ? கொலை உழுவைத் தோல் அசைஇக், கொன்றைத்தார் சுவல் புரளத் தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடும்கால், முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ? பாணியும் தூக்கும் சீரும் என்று இவை மாண் இழை அரிவை காப்ப, ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி. |
| 2 |
தொடங்கல் கண் தோன்றிய முதியவன் முதலாக, அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின், மடங்கல் போல் சினைஇ, மாயம் செய் அவுணரைக் கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூவெயிலும் உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின் சீறு அரும் கணிச்சியோன் சினவலின், அவ்வெயில் ஏறு பெற்று உதிர்வன போல், வரை பிளந்து, இயங்குநர் ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை - மறப்பு அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய, இறப்பத் துணிந்தனிர், கேண்மின் மற்று ஐய! தொலைவு ஆகி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ - நிலைஇய கற்பினாள், நீ நீப்பின் வாழாதாள், முலை ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை; இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு எனக் கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ - தொல் இயல் வழாஅமைத் துணை எனப் புணர்ந்தவள் புல் ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை; இடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு எனக் கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ - வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள் தட மென் தோள் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை; புன்கண் கொண்டு இனையவும், பொருள் வயின் அகறல் அன்பு அன்று, என்று யான் கூற, அன்புற்றுக் காழ் வரை நில்லாக் கடும் களிற்று ஒருத்தல் யாழ் வரைத் தங்கியாங்குத், தாழ்பு, நின் தொல்கவின் தொலைதல் அஞ்சி, என் சொல்வரைத் தங்கினர், காதலோரே. |
| 3 |
அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும், வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும் - இறை நில்லா வளை ஓட, இதழ் சோர்பு பனி மல்கப், பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள் விறல் நலன் இழப்பவும், வினை வேட்டாய்! கேஎள் இனி; 'உடை இவள் உயிர் வாழாள், நீ நீப்பின்' எனப், பல இடை கொண்டு யாம் இரப்பவும், எம கொள்ளாய், ஆயினை; கடைஇய ஆற்று இடை, நீர் நீத்த வறும் சுனை, அடையொடு வாடிய அணி மலர் - தகைப்பன. 'வல்லை நீ துறப்பாயேல், வகை வாடும் இவள்' என, ஒல்லாங்கு யாம் இரப்பவும், உணர்ந்து ஈயாய் ஆயினை; செல்லு நீள் ஆற்று இடைச், சேர்ந்து எழுந்த மரம் வாடப், புல்லு விட்டு இறைஞ்சிய பூங் கொடி - தகைப்பன. 'பிணிபு நீ விடல் சூழின், பிறழ்தரும் இவள்' எனப் பணிபு வந்து இரப்பவும், பல சூழ்வாய் ஆயினை; துணிபு நீ செலக் கண்ட ஆற்று இடை, அம்மரத்து அணி செல, வாடிய அம் தளிர் - தகைப்பன. யாம் நின் கூறவும் எம கொள்ளாய் ஆயினை; ஆனாது இவள் போல் அருள் வந்தவை காட்டி, மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல், நீ செல்லும் கானம் - தகைப்ப செலவு. |
| 4 |
வலி முன்பின், வல்லென்ற யாக்கைப் புலி நோக்கின் - சுற்றுஅமை வில்லர், சுரி வளர் பித்தையர், அற்றம் பார்த்து அல்கும் - கடுங்கண் மறவர் தாம் கொள்ளும் பொருள் இலர் ஆயினும், வம்பலர், துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து, உயிர் வௌவலின், புள்ளும் வழங்காப் புலம்பு கொள் ஆர் இடை, வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின், உள்ளினிர் என்பது அறிந்தனள், என் தோழி; 'காழ் விரி கவை ஆரம் மீவரும் இளமுலை போழ்து இடைப்படாஅமல் முயங்கியும் அமையார், என் தாழ் கதுப்பு அணிகுவர், காதலர்; மற்று, அவர் சூழ்வதை எவன் கொல்? அறியேன்!' என்னும்; 'முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரைக் கள்ளினும் மகிழ் செயும் என உரைத்தும் அமையார், என் ஒள் இழை திருத்துவர், காதலர்; மற்று, அவர் உள்ளுவது எவன் கொல்? அறியேன்!' என்னும்; 'நுண் எழில் மாமை சுணங்கு அணி ஆகம் தம் கண்ணொடு தொடுத்து என நோக்கியும் அமையார், என் ஒண் நுதல் நீவுவர், காதலர்; மற்று, அவர் எண்ணுவது எவன் கொல்? அறியேன்!' என்னும்; 'கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து!' என, என் தோழி அழிவொடு கலங்கிய எவ்வத்தள்; ஒருநாள், நீர், பொழுது இடைப்பட நீப்பின், வாழ்வாளோ? ஒழிக இனிப் பெரும! நின் பொருள் பிணிச் செலவே. |
| 5 |
பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரை மாஅல் யானையொடு மறவர் மயங்கித் தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அருஞ்சுரம், இறந்து, நீர் செய்யும் பொருளினும், யாம் நுமக்குச் சிறந்தனம் ஆதல் அறிந்தனிர் ஆயின், நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின் ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதைக், கேள் பெருந்தகையோடு எவன் பல மொழிகுவம்? நாளும் கோள்மீன் தகைத்தலும் தகைமே; கல்லெனக் கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின், புல்லென்ற களம் போலப் புலம்பு கொண்டு, அமைவாளோ? ஆள்பவர் கலக்குற அலை பெற்ற நாடு போல், பாழ்பட்ட முகத்தோடு பைதல் கொண்டு, அமைவாளோ? ஓர் இரா வைகலுள், தாமரைப் பொய்கையுள் நீர் நீத்த மலர் போல, நீ நீப்பின், வாழ்வாளோ? பொய் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு, எந்நாளோ, நெடுந்தகாய்! நீ செல்வது, அந்நாள் கொண்டு இறக்கும், இவள் அரும்பெறல் உயிரே. |
| 6 |
மரையா மரல் கவர, மாரி வறப்ப - வரை ஓங்கு அரும் சுரத்து ஆர் இடைச் செல்வோர், சுரை அம்பு மூழ்கச் சுருங்கிப், புரையோர் தம் உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்குத் - தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அரும் துயரம் கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்றால், என் நீர் அறியாதீர் போல இவை கூறல்? நின் நீர அல்ல நெடுந்தகாய்! எம்மையும், அன்பு அறச் சூழாதே, ஆற்று இடை நும்மொடு துன்பம் துணை ஆக நாடின், அது அல்லது இன்பமும் உண்டோ, எமக்கு? |
| 7 |
வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு வான் நீங்கு வைப்பின் வழங்காத் தேர் நீர்க்கு அவாஅம் கானம் கடத்திர், எனக் கேட்பின், யான் ஒன்று உசாவுகோ - ஐய! சிறிது; நீயே, செய் வினை மருங்கில் செலவு அயர்ந்து, யாழ நின் கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே; இவட்கே, செய்வுறு மண்டிலம் மையாப்பது போல், மை இல் வாள் முகம் பசப்பு ஊருமே; நீயே, வினை மாண் காழகம் வீங்கக் கட்டிப் புனை மாண் மரீஇய அம்பு தெரிதீயே; இவட்கே, சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல், இனை நோக்கு உண் கண் நீர் நில்லாவே; நீயே, புலம்பு இல் உள்ளமொடு பொருள் வயின் செலீஇய வலம் படு திகிரி வாய் நீவுதியே; இவட்கே, அலங்கு இதழ்க் கோடல் வீ உகுபவை போல் இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே; செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின், தன் நலம் கடைகொளப்படுதலின், மற்று இவள் இன் உயிர் தருதலும் ஆற்றுமோ - முன்னிய தேஎத்து முயன்று செய் பொருளே? |
| 8 |
நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்கக், கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல, ஞாயிறு கடுகுபு கதிர் மூட்டிக் காய்சினம் தெறுதலின், உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய, எழில் வேழம் வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்ற, நிலம் சேர, விறல் மலை வெம்பிய போக்கு அரு வெஞ்சுரம், சொல்லாது இறப்பத் துணிந்தனிர்க்கு, ஒரு பொருள் சொல்லுவது உடையேன், கேள்மின், மற்று ஐஇய! வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும் கோல் ஏழும், தம் பயன் கெட இடை நின்ற நரம்பு அறூஉம் யாழினும், நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ? மரீஇத் தாம் கொண்டாரைக் கொண்டக்கால் போலாது, பிரியும்கால் பிறர் எள்ளப், பீடு இன்றி புறம் மாறும் திருவினும், நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ? புரை தவப் பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை வரைவு இன்றிச் செறும் பொழுதில், கண் ஓடாது உயிர் வௌவும் அரைசினும், நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ? நச்சல் கூடாது பெரும இச்செலவு ஒழிதல் வேண்டுவல், சூழின் பழி இன்று; மன்னவன் புறந்தர, வரு விருந்து ஓம்பித், தன் நகர் விழையக் கூடின், இன் உறல் வியன் மார்ப! அது மனும் பொருளே. |
| 9 |
எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல், உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும், நெறிப்பட சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக் குறிப்பு ஏவல் செயல் மாலைக், கொளை நடை அந்தணீர்!- வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ் இடை என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும், தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்; அன்னார் இருவரை காணிரோ?- பெரும! காணேம் அல்லேம், கண்டனம், கடத்து இடை; ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்; பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை, மலை உளே பிறப்பினும், மலைக்கு அவை தாம் என் செய்யும்? நினையும்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை, நீர் உளே பிறப்பினும், நீர்க்கு அவை தாம் என் செய்யும்? தேரும்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை, யாழ் உளே பிறப்பினும், யாழ்க்கு அவை தாம் என் செய்யும்? சூழும்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்; சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்; அறம் தலை பிரியா ஆறும் மற்று அதுவே. |
| 10 |
வறியவன் இளமை போல், வாடிய சினையவாய்ச், சிறியவன் செல்வம் போல், சேர்ந்தார்க்கு நிழல் இன்றி, யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல், வேரொடு மரம் வெம்ப, விரி கதிர் தெறுதலின் அலவுற்றுக் குடி கூவ, ஆறு இன்றிப் பொருள் வெ·கிக், கொலை அஞ்சா வினைவரால், கோல் கோடியவன் நிழல் உலகு போல், உலறிய உயர் மர வெஞ்சுரம் - இடை கொண்டு பொருள் வயின் இறத்தி நீ எனக் கேட்பின், உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி ஓடற்பாள் மன்னோ! படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ புடை பெயர்வாய் ஆயினும், புலம்பு கொண்டு இனைபவள்? முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ எனக் கேட்பின், பனிய கண் படல் ஒல்லா படர் கூர்கிற்பாள் மன்னோ! நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆகத் துனி செய்து நீடினும், துறப்பு அஞ்சிக் கலுழ்பவள்? பொருள் நோக்கிப் பிரிந்து நீ போகுதி எனக் கேட்பின், மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள் மன்னோ! இருள் நோக்கம் இடையின்றி, ஈரத்தின் இயன்ற நின் அருள் நோக்கம் அழியினும், அவலம் கொண்டு அழிபவள்? 'வினை வெ·கி நீ செலின், விடும் இவள் உயிர்' எனப் புனை இழாய்! நின் நிலை யான் கூறப், பையென, நிலவு வேல் நெடுந்தகை, நீள் இடைச் செலவு ஒழிந்தனனால்; செறிக, நின் வளையே! |
| 11 |
'அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும், பெரிது ஆய பகை வென்று பேணாரைத் தெறுதலும், புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்' எனப் பிரிவு எண்ணிப் பொருள் வயின் சென்ற நம் காதலர் வருவர்கொல், வயங்கு இழாஅய்! வலிப்பல், யான்; கேஎள் இனி: 'அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால், கடியவே, கனம் குழாஅய்! காடு' -என்றார்; அக்காட்டுள், துடிஅடிக் கயம்தலை கலக்கிய சின் நீரைப் பிடி ஊட்டிப், பின் உண்ணும் களிறு, எனவும், உரைத்தனரே; 'இன்பத்தின் இகந்து ஒரீஇ, இலை தீந்த உலவையால், துன்புறூஉம் தகையவே காடு' -என்றார்; அக்காட்டுள், அன்புகொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தை மென் சிறகரால் ஆற்றும் புறவு, எனவும், உரைத்தனரே; 'கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான், துன்னரூஉம் தகையவே காடு' - என்றார்; அக்காட்டுள், இன்நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்குத் தன் நிழலைக் கொடுத்து அளிக்கும் கலை, எனவும், உரைத்தனரே. இனை நலம் உடைய கானம் சென்றோர் புனை நலம் வாட்டுநர் அல்லர்; மனை வயின் பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன; நல்எழில் உண் கண்ணும் ஆடுமால், இடனே. |
| 12 |
இடு முள் நெடு வேலி போலக், கொலைவர் கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த கடு நவை ஆர் ஆற்று, அறு சுனை முற்றி, உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை கடும் தாம் பதிபு, ஆங்கு கை தெறப்பட்டு, வெறி நிரை வேறு ஆகச் சார்ச் சாரல் ஓடி, நெறி மயக்குற்ற நிரம்பா நீடு அத்தம் - சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும், அஞ்சும் நறு நுதல் நீத்துப் பொருள் வயின் செல்வோய்! உரன் உடை உள்ளத்தை, செய் பொருள் முற்றிய வளமையான் ஆகும் பொருள் இது என்பாய்! இளமையும் காமமும் நின் பாணி நில்லா - இடை முலைக் கோதை குழைய முயங்கும் முறை நாள் கழிதல் உறாஅமைக் காண்டை - கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை; போற்றாய் - பெரும! நீ; காமம் புகர்பட வேற்றுமைக் கொண்டு, பொருள் வயின் போகுவாய், கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு மாற்றுமைக் கொண்ட வழி. |
| 13 |
செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல, எரி மேய்ந்த கரி வறல் வாய் புகுவ காணாவாய்ப், பொரி மலர்ந்தன்ன பொறிய மட மான், திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட, மரல் சாய மலை வெம்ப, மந்தி உயங்க, உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை, ஊறு நீர் அடங்கலின், உண் கயம் காணாது, சேறு சுவைத்துத், தம் செல் உயிர் தாங்கும் புயல் துளி மாறிய, போக்கு அரு, வெஞ்சுரம் - எல் வளை! எம்மொடு நீ வரின், யாழ நின் மெல் இயல் மேவந்த சீறடித், தாமரை, அல்லி சேர் ஆய் இதழ் அரக்குத் தோய்ந்தவை போலக் கல் உறின், அவ்வடி கறுக்குந அல்லவோ? நலம்பெறு சுடர் நுதால்! எம்மொடு நீ வரின், இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள், துலங்கு மான் மேல் ஊர்தித் துயில் ஏற்பாய், மற்று ஆண்டை விலங்கு மான் குரல் கேட்பின், வெருவுவை அல்லையோ? கிளி புரை கிளவியாய்! எம்மொடு நீ வரின், தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி கவின் வாட, முளி அரில் பொத்திய முழங்கு அழல் இடை போழ்ந்த வளி உறின், அவ் எழில் வாடுவை அல்லையோ? அனையவை காதலர் கூறலின், 'வினை வயின் பிரிகுவர்' எனப் பெரிது அழியாது, திரிபு உறீஇக், கடுங்குரை அருமைய காடு எனின், அல்லது, கொடுங் குழாய்! துறக்குநர் அல்லர் - நடுங்குதல் காண்மார், நகை குறித்தனரே. |
| 14 |
அணை மருள் இன் துயில் அம் பணைத் தட மென் தோள், துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண் கண், மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண்பல், மணம் நாறு நறு நுதல், மாரி வீழ் இரும் கூந்தல், அலர் முலை ஆகத்து, அகன்ற அல்குல், சில நிரை வால் வளைச் செய்யாயோ! எனப், பல பல கட்டுரை பண்டையின் பாராட்டி, இனிய சொல்லி, இன்னாங்குப் பெயர்ப்பது இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே; 'பொருள் அல்லால் பொருளும் உண்டோ?' என, யாழ நின் மருளி கொள் மட நோக்கம், மயக்கப்பட்டு அயர்த்தாயோ? 'காதலார் எவன் செய்ப, பொருள் இல்லாதார்க்கு?' என, ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ? செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு அப்பொருள் இம்மையும் மறுமையும் பகை ஆவது அறியாயோ? எம்மையும் பொருள் ஆக மதித்தீத்தை; நம்முள் நாம் கவவுக் கைவிடப் பெறும் பொருள் திறத்து அவவுக் கைவிடுதல்; அது மனும் பொருளே. |
| 15 |
அரி மான் இடித்தன்ன, அம் சிலை வல் வில் புரி நாண், புடையின், புறம் காண்டல் அல்லால் - இணைப் படைத் தானை அரசோடு உறினும் - கணைத் தொடை நாணும், கடும் துடி ஆர்ப்பின், எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி, உருத்த கடும் சினத்து, ஓடா மறவர், பொருள் கொண்டு புண் செயின் அல்லதை, அன்போடு அருள் புறம் மாறிய ஆர் இடை அத்தம் - புரிபு நீ புறம் மாறிப், போக்கு எண்ணிப், புதிது ஈண்டிப் பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ - செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம்; அந் நலம் பயலையால் உணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக் கால்? பொய் அற்ற கேள்வியால், புரையோரைப் படர்ந்து, நீ மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ - தீம் கதிர் மதி ஏய்க்கும் திருமுகம்; அம் முகம், பாம்பு சேர் மதி போலப் பசப்பு ஊர்ந்து தொலைந்தக் கால்? பின்னிய தொடர் நீவிப், பிறர் நாட்டுப் படர்ந்து, நீ மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ - புரி அவிழ் நறு நீலம் புரை உண் கண் கலுழ்பு ஆனாத், திரி உமிழ் நெய்யே போல், தெண் பனி உறைக்கும்கால்? அனையவை போற்ற, நினைஇயன நாடிக் காண்; வளமையோ வைகலும் செயல் ஆகும்; மற்று இவள் முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த இளமையும் தருவதோ, இறந்த பின்னே? |
| 16 |
பாடு இன்றிப் பசந்தகண் பைதல பனிமல்க, வாடுபு வனப்பு ஓடி, வணங்கு இறை வளை ஊர, ஆடு எழில் அழிவு அஞ்சாது, அகன்றவர் திறத்து இனி நாடும்கால், நினைப்பது ஒன்று உடையேன் மன்? அதுவும் தான்: தொல்நலம் தொலைபு, ஈங்கு, யாம் துயர் உழப்பத் துறந்து உள்ளார், துன்ன, நம் காதலர், துறந்து ஏகும் ஆர் இடைக் 'கல் மிசை உருப்பு அறக் கனை துளி சிதறு!' என, இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதுவோ? புனை இழாய்! ஈங்கு நாம் புலம்பு உறப் பொருள் வெ·கி, முனை என்னார் காதலர் முன்னிய ஆர் இடைச், 'சினை வாடச் சிறக்கும் நின் சினம் தணிந்தீக!' எனக், கனை கதிர்க் கனலியைக் காமுறல் இயைவதுவோ? ஒளி இழாய்! ஈங்கு நாம் துயர் கூரப், பொருள் வயின், அளி ஒரீஇக் காதலர் அகன்று ஏகும் ஆர் இ¨, 'முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக' என, வளி தரும் செல்வனை வாழ்த்தவும் இயைவதுவோ? செய் பொருள் சிறப்பு எண்ணிச் செல்வார் மாட்டு, இனையன தெய்வத்துத் திறன் நோக்கத், தெருமரல் - தேமொழி! - 'வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள் நிறன் ஓடிப் பசப்பு ஊர்தல் உண்டு' என, அறன் ஓடி விலங்கின்று, அவர் ஆள்வினை திறத்தே. |
| 17 |
படை பண்ணிப் புனையவும், பா மாண்ட பல அணைப் புடை பெயர்ந்து ஒடுங்கவும், புறம் சேர உயிர்ப்பவும், 'உடையதை எவன் கொல்?' என்று ஊறு அளந்தவர் வயின் நடை செல்லாய், நனி ஏங்கி நடுங்கல் காண் - நறு நுதால்! தொல் எழில் தொலைபு இவள் துயர் உழப்பத், துறந்து நீ, வல் வினை வயக்குதல் வலித்திமன்; வலிப்பளவை, நீள் கதிர் அவிர் மதி நிறைவு போல் நிலையாது, நாளினும் நெகிழ்பு ஓடும் நலன் உடன் நிலையுமோ? ஆற்றா நோய் அட, இவள் அணி வாட, அகன்று நீ, தோற்றம் சால் தொகு பொருள் முயறிமன், முயல்வளவை நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்குக் கூற்று ஊழ் போல் குறைபடூஉம் வாழ் நாளும் நிலையுமோ? வகை எழில் வனப்பு எஞ்ச, வரை போக வலித்து நீ, பகை அறு பய வினை முயறிமன்; முயல்வளவைத், தகை வண்டு புதிது உண்ணத் தாது அவிழ் தண் போதின் முகை வாய்த்த தடம் போலும் இளமையும் நிலையுமோ? பொருந்தி யான் தான் வேட்ட பொருள் வயின் நினைந்த சொல், திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய மருந்து போல், மருந்து, ஆகி மனன் உவப்பப் பெரும் பெயர் மீளி - பெயர்ந்தனன் செலவே! |
| 18 |
அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்பப், பிரிந்து உறை சூழாதி -ஐய! - விரும்பி நீ என் தோள் எழுதிய தொய்யிலும், யாழ நின் மைந்து உடை மார்பில் சுணங்கும். நினைத்துக் காண்; சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது; ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்; இளமையும், காமமும் ஓராங்குப் பெற்றார் வளமை விழைதக்கது உண்டோ? உள நாள், ஒரோஒ கை தம்முள் தழீஇ, ஒரோஒ கை ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும், ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை; அரிது அரோ சென்ற இளமை தரற்கு! |
| 19 |
செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடு பைய முயங்கிய அஞ்ஞான்று, அவை எல்லாம் பொய் ஆதல் யான் யாங்கு அறிகோ, மற்று? - ஐய! - அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து, பகல் முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன்; மகன் அல்லை மன்ற, இனி; செல் இனிச் சென்று நீ செய்யும் வினை முற்ற, அன்பு அற மாறி, 'யாம் உள்ளத் துறந்தவள் பண்பும் அறிதிரோ' என்று, வருவாரை என் திறம் யாதும் வினவல்; வினவின், பகலின் விளங்கு நின் செம்மல் சிதையத் தவல் அரு செய் வினை முற்றாமல், ஆண்டு ஓர் அவலம் படுதலும் உண்டு. |
| 20 |
பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அறச், செல் கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின், தணிவு இல் வெம் கோடைக்குத் தண் நயந்து அணி கொள்ளும் பிணி தெறல் உயக்கத்த பெருங் களிற்று இனம் தாங்கும் மணி திகழ் விறல் மலை வெம்ப மண் பகத், துணி கயம் துகள் பட்ட தூங்கு அழல் வெஞ்சுரம்- 'கிளி புரை கிளவியாய்! நின் -அடிக்கு எளியவோ, தளி உறுபு அறியாவே, காடு!' எனக் கூறுவீர்! வளியினும் வரை நில்லா வாழு நாள், நும் ஆகத்து அளி என உடையேன் யான்; அவலம் கொண்டு அழிவலோ? 'ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய்! நீ உணல் வேட்பின், ஆறு நீர் இல' என, அறன் நோக்கிக் கூறுவீர்! யாறு நீர், கழிந்தன்ன இளமை, நும் நெஞ்சு என்னும் தேறு நீர், உடையேன் யான், தெருமந்து ஈங்கு ஒழிவலோ? 'மாண் எழில் வேய் வென்ற தோளாய்! நீ வரின், தாங்கும் மாண் நிழல் இல ஆண்டை மரம்' எனக் கூறுவீர்! நீள் நிழல் தளிர் போல நிறன் ஊழ்த்தல் அறிவேன்; நும் தாள் நிழல் கைவிட்டு யான் தவிர்தலைச் சூழ்வலே? 'அணை அரு வெம்மைய காடு' எனக் கூறுவீர்; கணை கழிகல்லாத கல் பிறங்கு ஆர் இடைப் பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர்ப் பிணையும் காணிரோ? பிரியுமோ, அவையே? |
| 21 |
'பால் மருள் மருப்பின், உரல் புரை பாவடி, ஈர் நறும் கமழ் கடாஅத்து, இனம் பிரி ஒருத்தல் ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர், பொருள் வயின் பிரிதல் வேண்டும்' என்னும் அருள் இல் சொல்லும், நீ சொல்லினையே! நன்னர் நறு நுதல் நயந்தனை நீவி, 'நின்னின் பிரியலென் அஞ்சல் ஓம்பு' என்னும் நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே! அவற்றுள், யாவோ வாயின? மாஅல் மகனே! 'கிழவர் இன்னோர்' என்னாது, பொருள் தான், பழ வினை மருங்கின், பெயர்பு பெயர்பு உறையும்; அன்ன பொருள் வயின் பிரிவோய் - நின் இன்று இமைப்பு வரை வாழாள் மடவோள் அமை கவின் கொண்ட தோள் இணை மறந்தே. |
| 22 |
உண் கடன் வழிமொழிந்து இரக்கும்கால் முகனும், தாம் கொண்டது கொடுக்கும்கால் முகனும், வேறு ஆகுதல் பண்டும் இவ் உலகத்து இயற்கை; அ·து இன்றும் புதுவது அன்றே - புலன் உடை மாந்திர்! - தாய் உயிர் பெய்த பாவை போல, நலன் உடையார் மொழிக் கண் தாவார்; தாம் தம் நலம் தாது தேர் பறவையின் அருந்து, இறல் கொடுக்கும்கால், ஏதிலார் கூறுவது எவனோ நின் பொருள் வேட்கை? நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த செறி முறை பாராட்டினாய்; மற்று, எம் பல்லின் பறி முறை பாராட்டினையோ? - ஐய! நெய் இடை நீவி மணி ஒளி விட்டன்ன ஐவகை பாராட்டினாய்; மற்று, எம் கூந்தல் செய் வினை பாராட்டினையோ? - ஐய! குளன் அணி தாமரைப் பாசு அரும்பு ஏய்க்கும் இளமுலை பாராட்டினாய்; மற்று, எம் மார்பில் தளர்முலை பாராட்டினையோ? - ஐய! அடர் பொன் அவிர் ஏய்க்கும் அவ் வரி வாடச், சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எம் கண் படர் கூற நின்றதும் உண்டோ - தொடர் கூரத், துவ்வாமை வந்தக் கடை? |
| 23 |
இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர், புலம் கடி கவணையின், பூஞ் சினை உதிர்க்கும் விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெஞ்சுரம் தனியே இறப்ப, யான் ஒழிந்து இருத்தல் நகுதக்கன்று, இவ் அழுங்கல் ஊர்க்கே; உண்ணலும் உண்ணேன்; வாழலும் வாழேன்; தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர், வேள் நீர் உண்ட குடை ஓரன்னர்; நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர், அல்குநர் போகிய ஊர் ஓரன்னர்; கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர். சூடினர் இட்ட பூ ஓரன்னர்; யானும் நின் அகத்து அனையேன்; ஆனாது, கொலை வெம் கொள்கையொடு நாய் அகப்படுப்ப, வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல, நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே! |
| 24 |
'நெஞ்சு நடுக்குறக் கேட்டும், கடுத்தும், தாம் அஞ்சியது ஆங்கே அணங்கு ஆகும்', என்னும் சொல் - இன் தீம் கிளவியாய்! - வாய் மன்ற; நின் கேள் புதுவது பல் நாளும் பாராட்ட, யானும், 'இது ஒன்று உடைத்து' என எண்ணி, அது தேர, மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள், பாயல் கொண்டு என் தோள் கனவுவார்; ஆய் கோல், தொடி நிரை முன்கையாள் கையாறு கொள்ளாள், கடி மனை காத்து ஓம்ப வல்லுவள் கொல்லோ? 'இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் நெடு மலை வெஞ்சுரம் போக' என்றார், ஆய் இழாய்! தாம் இடை கொண்டது அது ஆயின், தம் இன்றி யாம் உயிர் வாழும் மதுகை இலேம் ஆயின், 'தொய்யில் துறந்தார் அவர்' என தம் வயின், நொய்யார் நுவலும் பழி நிற்பத் தம்மொடு போயின்று, சொல், என் உயிர். |
| 25 |
வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால், 'ஐவர்' என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தராக், கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்குக், களி திகழ் கடாஅத்த கடும் களிறு அகத்தவா, முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல், ஒள் உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத் தன் உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல, எழு உறழ் தடக்கையின் இனம் காக்கும் எழில் வேழம், அழுவம் சூழ் புகை அழல் அதர்பட மிதித்துத் தம் குழுவொடு புணர்ந்து போம், குன்று அழல் வெஞ்சுரம் இறத்திரால், ஐய! மற்று இவள் நிலைமை கேட்டீமின்; மணக்கும்கால், மலர் அன்ன தகையவாய்ச், சிறிது நீர் தணக்கும்கால், கலுழ்பு ஆனாக் கண் எனவும் உள அன்றோ? சிறப்புச் செய்து, உழையராப், புகழ்பு ஏத்தி, மற்று அவர் புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல்; ஈங்கு நீர் அளிக்கும்கால் இறை சிறந்து, ஒரு நாள் நீர் நீங்கும்கால், நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ? செல்வத்துள் சேர்ந்து அவர் வளன் உண்டு, மற்று அவர் ஒல்கு இடத்து உலப்பு இலா உணர்வு இலார் தொடர்பு போல்; ஒரு நாள் நீர் அளிக்கும்கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர் பாராட்டாக்கால் பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ? பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து, அம் மறை பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல்; யாம் நின் கூறுவது எவன் உண்டு? எம்மினும் நீ நற்கு அறிந்தனை, நெடுந்தகை! - வானம் துளி மாறு பொழுதின், இவ் உலகம் போலும் - நின் அளி மாறு பொழுதின், இவ் ஆய் இழை கவினே. |
| 26 |
ஒரு குழை ஒருவன் போல், இணர் சேர்ந்த மராஅமும், பருதி அம் செல்வன் போல், நனை ஊழ்த்த செருந்தியும், மீன் ஏற்றுக் கொடியோன் போல், மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும், ஏனோன் போல், நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும், ஆன் ஏற்றுக் கொடியோன் போல், எதிரிய இலவமும், ஆங்குத் தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போலப், போது அவிழ் மரத்தொடு பொரு கரை கவின் பெற, நோதக வந்தன்றால், இளவேனில் மேதக; பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்துத், தொல் கவின் தொலைந்த என் தட மென் தோள் உள்ளுவார்! ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி, வெல் புகழ் உலகு ஏத்த விருந்து நாட்டு உறைபவர்; திசை திசை தேன் ஆர்க்கும் திருமருதமுன்துறை, வசை தீர்ந்த என் நலம் வாடுவது அருளுவார்! நசை கொண்டு தம் நீழல் சேர்ந்தாரைத் தாங்கித், தம் இசை பரந்து உலகு ஏத்த, ஏதில் நாட்டு உறைபவர்; அறல் சாஅய் பொழுதோடு, எம் அணி நுதல் வேறு ஆகித், திறல் சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார்! ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு, உலையாது காத்து ஓம்பி, ஆறு இன்றிப் பொருள் வெ·கி அகன்ற நாட்டு உறைபவர்; தெருமரல் வாழி, தோழி! நம் காதலர் பொரு முரண் யானையர், போர் மலைந்து எழுந்தவர், செரு மேம்பட்ட வென்றியர், 'வரும்' என வந்தன்று, அவர் வாய்மொழித் தூதே! |
| 27 |
ஈதலில் குறை காட்டாது, அறன் அறிந்து ஒழுகிய தீது இலான் செல்வம் போல், தீம் கரை மரம் நந்தப், பேதுறு மட மொழிப், பிணை எழில் மான் நோக்கின், மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்பக் காதலர்ப் புணர்ந்தவர் கதுப்பு போல், கழல்குபு தாதொடும் தளிரொடும், தண் அறல் தகைபெறப், பேதையோன் வினை வாங்கப்ப் பீடு இலா அரசன் நாட்டு, ஏதிலான் படை போல, இறுத்தந்தது, இளவேனில்; நிலம் பூத்த மர மிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள, நலம் பூத்த நிறம் சாய, நம்மையோ மறந்தைக்க; கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்யப் புலம் பூத்துப் புகழ்பு ஆனாக் கூடலும் உள்ளார் கொல்? கல் மிசை மயில் ஆலக், கறங்கி ஊர் அலர் தூற்றத் தொல் நலம் நனி சாய, நம்மையோ மறந்தைக்க; ஒன்னாதார்க் கடந்து அடூஉம், உரவு நீர் மா கொன்ற, வென் வேலான் குன்றின் மேல் விளையாட்டும் விரும்பார் கொல்? மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ளப், பொய்யினால் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க; தைஇய மகளிர்தம் ஆயமோடு அமர்ந்து ஆடும் வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார் கொல்? நோய் மலி நெஞ்சமோடு இனையல், தோழி! 'நாம் இல்லாப் புலம்பு ஆயின், நடுக்கம் செய் பொழுது ஆயின், காமவேள் விழவு ஆயின், கலங்குவள் பெரிது' என ஏமுறு கடும் திண் தேர் கடவ, நாம் அமர் காதலர் துணை தந்தார், விரைந்தே. |
| 28 |
பாடல் சால் சிறப்பின் சினையவும், சுனையவும், நாடினர் கொயல் வேண்டா, நயந்து தாம் கொடுப்ப போல், தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார் கண் தோடு உறத் தாழ்ந்து, துறை துறை கவின் பெறச், செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணி கொள்பு, தொய்யகம் தாழ்ந்த கதுப்புப் போல் துவர் மணல் வையை வார் அவிர் அறல், இடை போழும் பொழுதினான்; விரிந்து ஆனா மலர் ஆயின், விளித்து ஆலும் குயில் ஆயின், பிரிந்து உள்ளார் அவர் ஆயின், பேதுறூஉம் பொழுது ஆயின், அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது வருந்த, நோய் மிகும் ஆயின் - வணங்கு இறை! அளி என்னோ? புதலவை மலர் ஆயின், பொங்கர் இன வண்டு ஆயின், அயலதை அலர் ஆயின், அகன்று உள்ளார் அவர் ஆயின், மதலை இல் நெஞ்சொடு மதன் இலள் என்னாது, நுதல் ஊரும் பசப்பு ஆயின் - நுணங்கு இறை! அளி என்னோ? தோயின அறல் ஆயின், சுரும்பு ஆர்க்கும் சினை ஆயின் மாவின தளிர் ஆயின், மறந்து உள்ளார் அவர் ஆயின், பூ எழில் இழந்த கண் புலம்பு கொண்டு அமையாது பாயல் நோய் மிகும் ஆயின் - பைந் தொடி அளி என்னோ? ஆய் இழாய்! ஆங்கனம் உரையாதி; சேயார்க்கு நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா; நம்மினும் தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர், பரிந்து எவன் செய்தி - வருகுவர் விரைந்தே! |
| 29 |
தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின், அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கை போல், பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம் புல்லிய புனிறு ஒரீஇ, புது நலம் ஏர்தர; வளையவர் வண்டல் போல், வார் மணல் வடுக் கொள, இளையவர் ஐம்பால் போல் எக்கர் போழ்ந்து அறல் வார, மா ஈன்ற தளிர் மிசை, மாயவள் திதலை போல், ஆய் இதழ்ப் பல் மலர் ஐய கொங்கு உறைத்தர, மேதக இளவேனில் இறுத்தந்த பொழுதின் கண்; சேயார் கண் சென்ற என் நெஞ்சினைச் - சின் மொழி! - நீ கூறும் வரைத்து அன்றி, நிறுப்பென்மன்? நிறை நீவி, வாய் விரிபு பனி ஏற்ற விரவுப் பல் மலர் தீண்டி, நோய் சேர்ந்த வைகலான், வாடை வந்து அலைத்தரூஉம்; போழ்து உள்ளார் துறந்தார் கண் புரி வாடும் கொள்கையைச் சூழ்பு ஆங்கே - சுடர் இழாய்! கரப்பென்மன்? கை நீவி வீழ் கதிர் விடுத்த பூ விருந்து உண்ணும் இரும் தும்பி யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம்; தொடி நிலை நெகிழ்த்தார்கண் தோயும் என் ஆர்உயிர் - வடு நீங்கு கிளவியாய்! வலிப்பென் மன்? வலிப்பவும், நெடு நிலாத் திறந்து உண்ண, நிரை இதழ் வாய்விட்ட கடி மலர் கமழ் நாற்றம், கங்குல் வந்து அலைத்தரூஉம்; வருந்தினை வதிந்த நின் வளை நீங்கச், சேய் நாட்டுப் பிரிந்து செய் பொருள் பிணி பின் நோக்காது - ஏகி, நம் அரும் துயர் களைஞர் வந்தனர் - திருந்து எயிறு இலங்கு நின் தேமொழி படர்ந்தே. |
| 30 |
அரும் தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல், அணி கொள விரிந்து ஆனாச் சினை தொறூஉம், வேண்டும் தாது அமர்ந்து ஆடிப், புரிந்து ஆர்க்கும் வண்டொடு, புலம்பு தீர்ந்து எவ்வாயும், இரும் தும்பி, இறைகொள எதிரிய வேனிலான் - துயில் இன்றி யாம் நீந்தத், தொழுவை அம் புனல் ஆடி, மயில் இயலார் மரு உண்டு, மறந்து அமைகுவான் மன்னோ - 'வெயில் ஒளி அறியாத விரி மலர்த் தண் காவில் குயில் ஆலும் பொழுது' எனக் கூறுநர் உளர் ஆயின்? பானாள் யாம் படர் கூரப் பணை எழில் அணை மென் தோள் மான் நோக்கினவரொடு மறந்து அமைகுவான் மன்னோ - 'ஆனாச் சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லைத் தேன் ஆர்க்கும் பொழுது' எனத் தெளிக்குநர் உளர் ஆயின்? உறலி யாம் ஒளி வாட, உயர்ந்தவன் விழவினுள் விறல் இழையவரோடு விளையாடுவான் மன்னோ - 'பெறல் அரும் பொழுதோடு பிறங்கு இணர்த் துருத்தி சூழ்ந்து அறல் வாரும், வையை' என்று அறையுநர் உளர் ஆயின்? தணியா நோய் உழந்து ஆனாத் தகையவள் - தகைபெற, அணி கிளர் நெடும் திண் தேர் அயர்மதி - பணிபு நின் காமர் கழல் அடி சேரா நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே! |
| 31 |
கடும் புனல் கால் பட்டுக் கலுழ் தேறிக் கவின் பெற, நெடும் கயத்து அயல் அயல் அயிர் தோன்ற, அம்மணல் வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உகப், பிரிந்தவர் நுதல் போலப் பீர் வீயக், காதலர்ப் புணர்ந்தவர் முகம் போலப் பொய்கை பூப் புதிது ஈன, மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால், கையாறு கடைக்கூட்டக் கலக்குறூஉம் பொழுதுமன் - 'பொய்யேம்' என்று, ஆய் இழாய்! புணர்ந்தவர் உரைத்ததை; மயங்கு அமர் மாறு அட்டு, மண் வௌவி வருபவர், தயங்கிய களிற்றின் மேல், தகை காண விடுவதோ - பயம் கெழு பல் கதிர் பால் போலும் பொழுதொடு, வயங்கு இழை தண்ணென, வந்த இவ் அசை வாடை? தாள் வலம்பட வென்று, தகை நல் மா மேல் கொண்டு, வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ - நீள் கழை நிவந்த பூ நிறம் வாடத் தூற்றுபு, தோள் அதிர்பு அகம் சேரத் துவற்றும் இச் சில் மழை? பகை வென்று திறை கொண்ட பாய் திண்தேர் மிசையவர் வகை கொண்ட செம்மல் நாம் வனப்பு ஆர விடுவதோ - புகை எனப் புதல் சூழ்ந்து பூ அம் கள் பொதி செய்யா முகை வெண் பல் நுதி பொர, முற்றிய கடும் பனி? வாளாதி வயங்கு இழாய்! 'வருந்துவள் இவள்' என, நாள் வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய் அன்றி, மீளி வேல் தானையர் புகுதந்தார் - நீள் உயர் கூடல் நெடு கொடி எழவே. |
| 32 |
எ·கு இடை தொட்ட, கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல் - மை அற - விளங்கிய, துவர் மணல் அது; அது ஐது ஆக நெறித்தன்ன அறல் அவிர் நீள் ஐம்பால் அணி நகை இடையிட்ட ஈகை அம் கண்ணி போல், பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ, வெறி கொளத் - துணி நீரால், தூ மதி நாளால், அணிபெற - ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும், ஆன்றவர் அடக்கம் போல் அலர்ச் செல்லாச் சினையொடும், வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடும், நல்லவர் நுடக்கம் போல் நயம் வந்த கொம்பொடும், உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும், புணர்ந்தவர் முயக்கம் போல் புரிவுற்ற கொடியொடும் - நயந்தார்க்கோ நல்லைமன், இளவேனில்! எம் போல? பசந்தவர் பைதல் நோய், பகை எனத் தணித்து, நம் இன் உயிர் செய்யும் மருந்து ஆகப், பின்னிய காதலர் - எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லைப் போது ஆரக் கொள்ளும் கமழ் குரற்கு என்னும் - தூது வந்தன்றே, தோழி! துயர் அறு கிளவியோடு! அயர்ந்தீகம் விருந்தே! |
| 33 |
வீறு சால் ஞாலத்து வியல் அணி காணிய யாறு கண் விழித்த போல், கயம் நந்திக் கவின் பெற, மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போலப், பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உகத், துணி கய நிழல் நோக்கித் துதைபு உடன் வண்டு ஆர்ப்ப, மணி போல அரும்பு ஊழ்த்து, மரம் எல்லாம் மலர் வேயக் காதலர்ப் புணர்ந்தவர் கவவு கை நெகிழாது, தாது அவிழ் வேனிலோ வந்தன்று; வாரார், நம் போது எழில் உண் கண் புலம்ப நீத்தவர்; எரி உரு உறழ இலவம் மலரப், பொரி உரு உறழப் புன்கு பூ உதிரப், புது மலர்க் கோங்கம் பொன் எனத் தாது ஊழ்ப்பத், தமியார்ப் புறத்து எறிந்து எள்ளி, முனிய வந்து, ஆர்ப்பது போலும் பொழுது; என் அணி நலம் போர்ப்பது போலும் பசப்பு; நொந்து நகுவன போல் நந்தின கொம்பு; நைந்து உள்ளி உகுவது போலும், என் நெஞ்சு; எள்ளித் தொகுபு உடன் ஆடுவ போலும், மயில்; கையில் உகுவன போலும், வளை; என் கண் போல் இகுபு அறல் வாரும் பருவத்தும் வாரார்; மிகுவது போலும் இந் நோய்; நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல் இரங்கு இசை மிஞிறொடு தும்பி தாது ஊதத் - தூது அவர் விடுதரார்; துறப்பார் கொல்? நோதக இரும் குயில் ஆலும் அரோ; புரிந்து நீ எள்ளும் குயிலையும், அவரையும், புலவாதி; நீல் இதழ் உண் கண்ணாய் நெறி கூந்தல் பிணி விட நாள் வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய் அன்ற, மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார் - கால் உறழ் கடு திண் தேர் கடவினர் விரைந்தே. |
| 34 |
மன் உயிர் ஏமுற, மலர் ஞாலம் புரவு ஈன்று, பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி, இறந்த பின், சில் நீரால் அறல் வார, அகல் யாறு கவின் பெற, முன் ஒன்று தமக்கு ஆற்றி, முயன்றவர் இறுதிக் கண் பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடு உடையாளர் போல், பல் மலர் சினை உகச் சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப, இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான்; விரி காஞ்சித் தாது ஆடி இரும் குயில் விளிப்பவும், பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும், கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி, எரி பொத்தி, என் நெஞ்சம் சுடும் ஆயின், எவன் செய்கோ? பொறை தளர் கொம்பின் மேல் சிதர் இனம் இறைகொள நிறை தளராதவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும், முறை தளர்ந்த மன்னவன் கீழ்க் குடி போலக் கலங்குபு, பொறை தளர்பு பனி வாரும் கண் ஆயின், எவன் செய்கோ? தளை அவிழ் பூஞ் சினைச் சுரும்பு யாழ் போல இசைப்பவும், கொளை தளராதவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும், கிளை அழிய வாழ்பவன் ஆக்கம்போல் புல் என்று, வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள் ஆயின், எவன் செய்கோ? நின் உள் நோய் நீ உரைத்து அலமரல்; எல்லா! நாம் எண்ணிய நாள் வரை இறவாது, காதலர் பண்ணிய மாவினர் புகுதந்தார் கண் உறு பூசல் கை களைந்தாங்கே. |
| 35 |
மடி இலான் செல்வம் போல் மரன் நந்த, அச் செல்வம் படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப, மாயவள் மேனி போல் தளிர் ஈன, அம் மேனித் தாய சுணங்கு போல் தளிர் மிசைத் தாது உக, மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப, அலர் தாய துறை நண்ணி அயிர் வரித்து அறல் வார, நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால், 'துறந்து உள்ளார் அவர்' எனத், துனி கொள்ளல், எல்லா! நீ; வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர்த் தண் அருவி நறு முல்லைத் தாது உண்ணும் பொழுது அன்றோ- கண் நிலா நீர் மல்கக் கவவி, நாம் விடுத்தக்கால் ஒள் நுதால்! நமக்கு அவர் 'வருதும்' என்று உரைத்ததை? மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து, அவர் வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுது அன்றோ - 'வலன் ஆக, வினை!' என்று வணங்கி, நாம் விடுத்தக்கால், ஒளி இழாய்! நமக்கு அவர் 'வருதும்' என்று உரைத்ததை? நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார் புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ- பல நாடு நெஞ்சினேம் பரிந்து, நாம் விடுத்தக்கால், சுடர் இழாய்! நமக்கு அவர் 'வருதும்' என்று உரைத்ததை? உள்ளுதொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி, எள் அறு காதலர் இயைதந்தார் - புள் இயல் காமர் கடும் திண்தேர் பொருப்பன், வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே. |
| 36 |
கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல், மராத்து நெடு மிசைச் சூழும் மயில் ஆலும் சீர, வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்பத், தொடி மகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர, இயன் எழீஇயவை போல, எவ்வாய்யும் 'இம்' மெனக் கயன் அணி பொதும்பருள் கடி மலர்த் தேன் ஊத, மலர் ஆய்ந்து வயின் வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப, இரும் குயில் ஆலப், பெரும் துறை கவின் பெறக் குழவி வேனில் விழவு எதிர்கொள்ளும் சீரார் செவ்வியும் வந்தன்று; வாரார் தோழி நம் காதலோரே; பாஅய்ப் பாஅய்ப் பசந்தன்று, நுதல்; சாஅய்ச் சாஅய் நெகிழ்ந்தன தோள்; நனி அறல் வாரும் பொழுது என, வெய்ய பனி அறல் வாரும், என் கண்; மலை இடை போயினர் வரல் நசைஇ நோயொடு முலை இடைக் கனலும், என் நெஞ்சு; காதலின் பிரிந்தார் கொல்லோ? வறிது, ஓர் தூதொடு மறந்தார் கொல்லோ? நோதகக், காதலர் காதலும் காண்பாம் கொல்லோ? துறந்தவர் ஆண்டு ஆண்டு உறைகுவர் கொல்லோ? யாவது - 'நீள் இடைப்படுதலும் ஒல்லும், யாழ நின் வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி! நாள் அணி சிதைத்தலும் உண்டு' என நயவந்து கேள்வி அந்தணர் கடவும் வேள்வி ஆவியின் உயிர்க்கும், என் நெஞ்சே. |
| 37 |
கய மலர் உண் கண்ணாய்! காணாய்; ஒருவன் வய மான் அடித் தேர்வான் போலத், தொடை மாண்ட கண்ணியன், வில்லன், வரும்; என்னை நோக்குபு, முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான் உற்ற நோய் உரைக்கல்லான் பெயரும்மன், பல் நாளும்! பாயல் பெறேஎன், படர் கூர்ந்து, அவன் வயின், சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக் கண் நின்று கூறுதல் ஆற்றான், அவன் ஆயின்; பெண் அன்று, உரைத்தல் நமக்கு ஆயின்; 'இன்னதூஉம் காணான், கழிதலும் உண்டு' என்று, ஒரு நாள், என் தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர் நாண் இன்மை செய்தேன், நறு நுதால்! ஏனல் இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல், ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை, 'ஐய! சிறிது என்னை ஊக்கி' எனக் கூறத், 'தையால்! நன்று' என்று அவன் ஊக்கக், கை நெகிழ்பு, பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பில்; வாய்யாச் செத்து, ஒய்யென ஆங்கே எடுத்தனன்; கொண்டான் மேல் மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன்; ஆயிடை மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின், மற்று ஒய்யென, 'ஒண் குழாய்! செல்க' எனக் கூறி விடும் பண்பின் அங்கண் உடையன் அவன்! |
| 38 |
இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன் உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக, ஐ இரு தலையின் அரக்கர் கோமான் தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை எடுக்கல் செல்லாது உழப்பவன் போல - உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக் கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை, 7 நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய்த், தன் கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்; ஆர் இடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்தக்கால், நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள், வைகறை, கார் பெற்ற புலமே போல், கவின் பெறும்; அக் கவின் தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தைக் காண்! இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால், பொருள் இல்லான் இளமை போல் புல்லென்றாள், வைகறை, அருள் வல்லான் ஆக்கம் போல் அணிபெறும்; அவ் அணி தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக் காண்; மறந்திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்தக்கால், அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள், வைகறை, திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும்; அத் திருப் புறங்கூற்றுத் தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்தைக் காண்; நின் உறு விழுமம் கூறக் கேட்டு வருமே, தோழி! நல் மலை நாடன் - வேங்கை விரிவு இடம் நோக்கி, வீங்கு இறைப் பணைத் தோள் வரைந்தனன் கொளற்கே. |
| 39 |
காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள், தாமரைக் கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான் நீள் நாக நறும் தண் தார் தயங்கப் பாய்ந்து, அருளினால், பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான் அகல் அகலம், வரு முலை புணர்ந்தன என்பதனால், என் தோழி அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே; அவனும் தான், ஏனல் இதணத்து அகில் புகை உண்டு இயங்கும் வான் ஊர் மதியம் வரை சேரின், அவ் வரைத், 'தேனின் இறால்' என, ஏணி இழைத்திருக்கும் கான் அகல் நாடன் மகன்; சிறுகுடியீரே! சிறுகுடியீரே! - வள்ளி கீழ் வீழா; வரை மிசைத் தேன் தொடா; கொல்லை குரல் வாங்கி ஈனா - மலை வாழ்நர் அல்ல புரிந்து ஒழுகலான்; காந்தள் கடி கமழும், கண் வாங்கு, இரும் சிலம்பின் வாங்கு அமை மென் தோள் குறவர் மட மகளிர் தாம் பிழையார்; கேள்வர்த் தொழுது எழலால், தம் ஐயரும் தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்; அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட என்னையர்க்கு உய்த்து உரைத்தாள் யாய்; அவரும், தெரி கணை நோக்கிச் சிலை நோக்கிக், கண் சேந்து ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து, ஆறி, 'இருவர் கண் குற்றமும் இல்லையால்' என்று, தெருமந்து சாய்த்தார் தலை; தெரி இழாய்! நீயும் நின் கேளும் புணர, வரை உறை தெய்வம் உவப்ப, உவந்து குரவை தழீஇ யாம் ஆடக் குரவையுள் கொண்டு நிலை பாடிக் காண்; நன்னாள் தலை வரும் எல்லை, நமர் மலைத் தம் நாண் தாம் தாங்குவார், என் நோற்றனர் கொல்? புன வேங்கைத் தாது உறைக்கும் பொன் அறை முன்றில் நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ? நனவில் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே, கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ? விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள் பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்மன் கொல்லோ? பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழம் கேண்மை கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்மன் கொல்லோ? மை தவழ் வெற்பன் மண அணி காணாமல், கையால் புதை பெறூஉம் கண்களும் கண்களோ? என்னைமன், நின் கண்ணால் காண்பென்மன், யான்; நெய்தல் இதழ் உண் கண், நின் கண் ஆக, என் கண் மன; நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇத், தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக, வேய் புரை மென் தோள் பசலையும், அம்பலும், மாய புணர்ச்சியும், எல்லாம் உடன் நீங்கச், சேய் உயர் வெற்பனும் வந்தனன்; பூ எழில் உண் கணும் பொலிக மா இனியே! |
| 40 |
அகவினம் பாடுவாம், தோழி! - அமர்க் கண் நகை மொழி, நல்லவர் நாணும் நிலை போல், தகை கொண்ட ஏனலுள் தாழ் குரல் உரீஇ, முகை வளர் சாந்து உரல், முத்து ஆர் மருப்பின் வகை சால் உலக்கை வயின் வயின் ஓச்சிப், பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி, அகவினம் பாடுவாம், நாம். ஆய் நுதல், அணி கூந்தல், அம் பணைத் தட மென் தோள் தேன் நாறு கதுப்பினாய்! - யானும் ஒன்று ஏத்துகு - வேய் நரல் விடர் அகம் நீ ஒன்று பாடித்தை; கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல், எடுத்த நறவின் குலை அலங்கு காந்தள் தொடுத்த தேன் சோரத், தயங்கும் - தன் உற்றார் இடுக்கண் தவிர்ப்பான் மலை; கல்லாக் கடுவன் கணம் மலி சுற்றத்து, மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே - தொல் எழில் தோய்ந்தார் தொலையின், அவரினும் அல்லல் படுவான் மலை; புரி விரி, புதை துதை, பூத் ததைந்த தாழ் சினைத் தளிர் அன்ன எழில் மேனி தகை வாட, நோய் செய்தான் அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம்; விண் தோய் வரைப், பந்து எறிந்த அயா வீடத், தண் தாழ் அருவி, அரமகளிர், ஆடுபவே - பெண்டிர் நலம் வௌவித் தண் சாரல் தாது உண்ணும் வண்டின் துறப்பான் மலை; ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற கடுஞ் சூல் வயாவிற்கு அமர்ந்து, நெடுஞ் சினைத் தீம் கண் கரும்பின் கழை வாங்கும் - 'உற்றாரின் நீங்கலம்' என்பான் மலை; தன் மலை பாட, நயவந்து கேட்டு அருளி, மெய் மலி உவகையன் புகுதந்தான் - புணர்ந்து ஆரா மென் முலை ஆகம் கவின் பெறச் செம்மலை ஆகிய மலை கிழவோனே! |
| 41 |
பாடுகம், வா - வாழி, தோழி! வயக் களிற்றுக் கோடு உலக்கை ஆக, நல் சேம்பின் இலை சுளகா ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து, இருவாம் பாடுகம், வா - வாழி, தோழ! நல் தோழி! - பாடுற்று; இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடுநாள், கொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்துப், பிடியொடு மேயும் புன்செய் யானை அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன், நெடு வரை ஆசினிப் பணவை ஏறிக் கடு விசை கவணையில் கல் கை விடுதலின், இறு வரை வேங்கையின் ஒள் வீ சிதறி, ஆசினி மெல் பழம் அளிந்தவை உதிராத் , தேன் செய் இறாஅல் துளைபடப் போகி, நறு வடி மாவின் பை துணர் உழக்கிக், குலை உடை வாழைக் கொழு மடல் கிழியாப், பலவின் பழத்துள் தங்கும், மலை கெழு வெற்பனைப் பாடுகம், வா - வாழி, தோழி! நல் தோழி! - பாடுற்று; இலங்கும் அருவித்து, இலங்கும் அருவித்தே; வானின் இலங்கும் அருவித்தே - தான் உற்ற சூள் பேணான் பொய்த்தான் மலை; பொய்த்தற்கு உரியனோ? பொய்த்தற்கு உரியனோ? 'அஞ்சல் ஓம்பு' என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ? குன்று அகல் நல் நாடன் வாய்மையில் பொய் தோன்றின் திங்களுள் தீத் தோன்றியற்று; இள மழை ஆடும்; இள மழை ஆடும்; இள மழை வைகலும் ஆடும் - என் முன்கை வளை நெகிழ வாராதோன் குன்று; வாராது அமைவானோ? வாராது அமைவானோ? வாராது அமைகுவான் அல்லன்; மலை நாடன், ஈரத்துள் இன்னவை தோன்றின், நிழல் கயத்து நீருள் குவளை வெந்தற்று; மணி போலத் தோன்றும்; மணி போலத் தோன்றும்; மண்ணா மணி போலத் தோன்றும் - என் மேனியைத் துன்னான் துறந்தான் மலை; துறக்குவன் அல்லன்; துறக்குவன் அல்லன்; தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன் - தொடர்புள் இனையவை தோன்றின், விசும்பில் சுடருள் இருள் தோன்றியற்று; நன்று ஆகின்றால் -தோழி! நம் வள்ளையுள் ஒன்றி நாம் பாட, மறை நின்று கேட்டு அருளி, மென் தோள் கிழவனும் வந்தனன்; நுந்தையும் மன்றல் வேங்கைக் கீழ் இருந்து, மணம் நயந்தனன், அம் மலை கிழவோற்கே. |
| 42 |
மறம் கொள் இரும் புலித் தொல் முரண் தொலைத்த முறம் செவி வாரணம் முன் குளகு அருந்திக் கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும் பிறங்கு இரும் சோலை நல் மலை நாடன் மறந்தான்; மறக்க; இனி, எல்லா! நமக்குச் சிறந்தமை நாம் நற்கு அறிந்தனம்; ஆயின், அவன் திறம் கொல் யானைக் கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம். வள்ளை அகவுவம் வா, இகுளை! நாம் வள்ளை அகவுவம், வா; காணிய வா - வாழி தோழி! - வரைத் தாழ்பு - வாள் நிறம் கொண்ட அருவித்தே, நம் அருளா நாண் இலி நாட்டு மலை; ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ - ஓர்வு உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல் அறம் புரி நெஞ்சத்தவன்? தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம் பொன் அணி யானை போல் தோன்றுமே - நம் அருளாக் கொன்னாளன் நாட்டு மலை; கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ? - தன் மலை நீரினும் சாயல் உடையன், நயந்தோர்க்குத் தேர் ஈயும் வண் கையவன்; வரை மிசை மேல் தொடுத்த நெய் கண் இறாஅல் மழை நுழை திங்கள் போல் தோன்றும் - இழை நெகிழ எவ்வம் உறீஇயினான் குன்று; எஞ்சாது, எல்லா! கொடுமை நுவலாதி - அஞ்சுவது அஞ்சா அறன் இலி அல்லன், என் நெஞ்சம் பிணிக்கொண்டவன்! என்று யாம் பாட, மறை நின்று கேட்டனன்; தாழ் இரும் கூந்தல் என் தோழியைக் கை கவியாச், சாயல் இன் மார்பன் சிறுபுறம் சார்தர, ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என் ஆய் இழை மேனிப் பசப்பு. |
| 43 |
வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து ஏந்து மருப்பின், இன வண்டு இமிர்பு ஊதும் சாந்த மரத்தின், இயன்ற உலக்கையால், ஐவன வெண் நெல் அறை உரலுள் பெய்து, இருவாம், ஐயனை ஏத்துவாம் போல, அணிபெற்ற மை படு சென்னிப் பய மலை நாடனைத் தையலாய்! பாடுவாம் நாம்; தகையவர் கைச் செறித்த தாள் போலக் காந்தள் முகையின் மேல் தும்பி இருக்கும் - பகை எனின், கூற்றம் வரினும் தொலையான், தன் நட்டார்க்குத் தோற்றலை நாணாதோன் குன்று; வெருள்பு உடன் நோக்கி, வியல் அறை யூகம், இருள் தூங்கு இறு வரை ஊர்பு இழிபு ஆடும் வருடைமான் குழவிய வள மலை நாடனைத் தெருளத் தெரி இழாய்! - நீ ஒன்று பாடித்தை; நுண் பொறி மான் செவி போல, வெதிர் முளைக் கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே - மாறு கொண்டு ஆற்றார் எனினும், பிறர் குற்றம் கூறுதல் தேற்றாதோன் குன்று; புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட புணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின் வயங்கு எழில் யானைப் பய மலை நாடனை - மணம் நாறு கதுப்பினாய்! - மறுத்து ஒன்று பாடித்தை; கடும் கண் உழுவை அடி போல வாழைக் கொடும் காய் குலை தொறூஉம் தூங்கும் - இடும்பையால் இன்மை உ |