கல்கியின் "அலை ஒசை"
பாகம் 4 - பிரளயம்

kalkiyin2 alai Ocai
Part-IV (piraLayam)

In tamil script, utf-8 format




Acknowledgements:

Our Sincere thanks go to tiru Bhaskaran Sankaran of Anna University - KBC Research Center, MIT - Chrompet Campus, Chennai, India. for his dedication in publishing Kalki's Works and for the help to publish them in PM in TSCII format.
Etext preparation, TAB level proof reading by Ms. Gracy & Ms Parimala
HTML Version and TSCII version proof reading : tiru N D LogaSundaram, selvi L Selvanayagi Chennai
PDF version: Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland.
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

ன Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கல்கியின் "அலை ஒசை"
பாகம் 4 - பிரளயம்

உள்ளுறை -அத்தியாயங்கள்

4.001 தாயின் மனக்குறை மின்பதிப்பு 4.021 கண்கண்ட தெய்வம்மின்பதிப்பு
4.002 "சீதா வருகிறாள்!" மின்பதிப்பு 4.022 டைரக்டர் சியாம சுந்தர் மின்பதிப்பு
4.003 டாக்டரின் உத்தரவு மின்பதிப்பு 4.023 சீதாவின் பிரார்த்தனை மின்பதிப்பு
4.004 காதல் என்னும் மாயை மின்பதிப்பு 4.024 என் சொர்க்கம் மின்பதிப்பு
4.005 மாயா மோகினி மின்பதிப்பு 4.025 அடுத்த ஆண்டு மின்பதிப்பு
4.006 நீர்மேற் குமிழி மின்பதிப்பு 4.026 தந்தியின் மர்மம் மின்பதிப்பு
4.007 நித்திய வாழ்வு மின்பதிப்பு 4.027 இருளில் ஒரு குரல் மின்பதிப்பு
4.008 "மாமழை போற்றுதும்" மின்பதிப்பு 4.028 நரக வாசல் திறந்தது! மின்பதிப்பு
4.009 பட்டாபியின் புனர்ஜென்மம் மின்பதிப்பு 4.029 சீமந்த புத்திரி மின்பதிப்பு
4.010 எலெக்ஷன் சனியன்! மின்பதிப்பு 4.030 "மரணமே! வா!" மின்பதிப்பு
4.011 பட்டாபியின் பதவி மோகம் மின்பதிப்பு 4.031 பிழைத்த அகதிமின்பதிப்பு
4.012 சீதாவின் பெருமிதம் மின்பதிப்பு 4.032 ராகவன் துயரம் மின்பதிப்பு
4.013 ராகவன் பகற் கனவு மின்பதிப்பு 4.033 ராகவன் கோபம்மின்பதிப்பு
4.014 ரஜினிபூர் ராஜகுமாரி மின்பதிப்பு 4.034 சீதாவின் ஆவி மின்பதிப்பு
4.015 கங்காபாயின் கதை மின்பதிப்பு 4.035 பானிபத் முகாம்மின்பதிப்பு
4.016 ரமாமணியின் தோல்வி மின்பதிப்பு 4.036 ஜனவரி 31ம் தேதி மின்பதிப்பு
4.017 படிகள் பிழைத்தன!மின்பதிப்பு 4.037 ராகவனும் தாரிணியும் மின்பதிப்பு
4.018 பட்டாபியின் வெற்றி மின்பதிப்பு 4.038 மணி அடித்தது! மின்பதிப்பு
4.019 பாம்புக்கு வார்த்த பால் மின்பதிப்பு 4.039 கடவுளின் கருணை மின்பதிப்பு
4.020 அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி மின்பதிப்பு 4.040 "பாக்கியசாலி சீதா!" மின்பதிப்பு
4.041 சூரியாவின் இதயம்மின்பதிப்பு
4.042லலிதாவின் மன்னி மின்பதிப்பு
4.043 பாமா விஜயம்மின்பதிப்பு

கல்கியின் அலை ஒசை
பாகம் 4- 'பிரளயம்'

முதல் அத்தியாயம் :
தாயின் மனக்குறை

இராஜம்பேட்டை கிராமத்தை நாம் பார்த்து ஏறக்குறைய ஒரு வியாழ வட்டம் ஆகிறது. கணக்காகச் சொல்லப் போனால் பதினோரு வருஷமும் பத்து மாதமும் ஆகின்றன. பழைய தபால் சாவடிக் கட்டிடமும் ஏறக்குறைய முன்னால் பார்த்த மாதிரியே காணப்படுகிறது. ஆனால் அக்கட்டிடத்தின் வெளிச்சுவரிலும் தூண்களிலும் சில சினிமா விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருப்பதைக் காண்கிறோம். விளம்பரம் ஒட்டப்படாத இடங்களில் "ஜே ஹிந்த்" என்றும், "நேதாஜி வாழ்க!" என்றும் எழுதப்பட்டிருந்தன. தபால் சாவடிக்கெதிரே சாலையில் கப்புங் கிளையுமாகப் படர்ந்திருந்த பெரிய ஆலமரத்தைக் காணவில்லை. இதனால் அந்தச் சாலையின் அழகு குன்றி வெறிச்சென்றிருந்தது. மிட்டாய்க் கடை இருந்த இடத்தில் இப்போது ரேஷன் கடை இருந்தது. கடைக்காரர் மனது வைத்து எப்போது அரிசிப் படி போடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டு நாலைந்து ஸ்திரீகள் கையில் கூடையுடன் நின்றார்கள். தபால் சாவடிக்குள்ளே ஜன நடமாட்டம் காணப்பட்டது. ஆனால் நமக்குத் தெரிந்தவர்கள் யாரும் அங்கில்லை. போஸ்ட் மாஸ்டர், போஸ்ட்மேன், ரன்னர் - எல்லோரும் நமக்குப் புதியவர்கள். வரப்போகும் தபால் ஸ்டிரைக்கைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருந் தார்கள். இந்தத் தெரியாத மனிதர்களை விட்டு விட்டு நமக்குத் தெரிந்த மனிதர்கள் இன்னும் வசிக்கும் இராஜம்பேட்டை அக்கிரகாரத் துக்குப் போவோம்.

அக்கிரகாரத்தின் தோற்றத்தில் சில மாறுதல்கள் காணப்பட்டன. முன்னே நாம் பார்த்ததற்கு இப்போது இன்னும் சில வீடுகள் பாழடைந்து போயிருந்தன. கிட்டாவய்யரின் வீட்டு வாசலில் பந்தல் இல்லை. வீட்டின் முகப்பு களைகுன்றிப் போயிருந்தது. ஆனால் சீமாச்சுவய்யரின் வீடு இப்போது முன்னைவிட ஜோராக இருந்தது. சீமாச்சுவய்யர் சரியான சமயத்தில் தேவபட்டணத்துக்குப் போய் ஜவுளிக் கடை வைத்தார். திருமகளின் கடாட்சம் அவருக்கு அமோகமாகப் பெருகியது. பழைய வீட்டைத் திருத்தி நன்றாகக் கட்டியிருந்தார். கிட்டா வய்யருக்குச் சமீப காலத்தில் சில கஷ்டங்கள் ஏற்பட்டிருந்தன. குடிபடைகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் குடியிருக்கும் மனைக் கட்டு விஷயமாக நெடுங்காலமாய்ச் சச்சரவு நடந்து கொண்டிருந்தது. சென்ற வருஷத்தில் கோர்ட்டில் மிராசுதாரர்களுக்குச் சாதகமாகத் தீர்ந்தது. இந்த வழக்கில் முன்னால்நின்று நடத்தும் பொறுப்புக் கிட்டாவய்யரின் தலையில் சுமந்திருந்தது. இதனால் பணவிரயம் அதிகமானதோடு குடிபடைகளின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்.

யாரும் எதிர்பாராத விபத்து ஒன்று கிட்டாவய்யருக்குச் சென்ற வருஷம் நேரிட்டது. சுற்றுப் புறங்களில் திருட்டுகளும், கொள்ளைகளும் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டிருந்தன; திருட்டுக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்ட ஒரு கூட்டத்தினர் பட்டாமணியம் கிட்டாவய்யரைச் சமபடுத்தி வாக்குமூலம் எழுதி வைத்தார்கள். உடனே கிட்டாவய்யர் பட்டாமணியம் உத்யோகத்திலிருந்து சஸ்பெண்டு செய்து வைக்கப்பட்டார். குற்றச்சாட்டுகளைப் பற்றிய போலீஸ் விசாரணையும் உத்தியோக விசாரணையும் நடந்தன. கடைசியாக விரோதத்தின் பேரில் பொய்யாக எழுதி வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்று ஏற்பட்டது. ஆயினும் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது கிட்டாவய்யருடைய மனதில் ஏற்பட்ட வேதனைக்கு அளவே கிடையாது. வீட்டை விட்டு வெளியே புறப்படுவதற்கே அவருக்கு வெட்கமாயிருந்தது! ஆயினும் வெளியில் கிளம்புவது அவசியமாகவும் இருந்தது! பணம் நிறையச் செலவாயிற்று. முடிவாக ஒன்றுமில்லை என்று ஏற்பட்ட போதிலும், "பணத்தைச் செலவழித்து அமுக்கி விட்டார்!" என்ற பேச்சும் பராபரியாகக் காதில் விழாமற் போகவில்லை. பத்துநாளைக்கு முன்பு கிட்டாவய்யர் தேவபட்டணம் சென்று, அதற்குச் சில நாளைக்கு முன்னால்தான் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்திருந்த தம் மாப்பிள்ளை பட்டாபிராமனைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தார். இராஜம்பேட்டையிலிருந்து நாலு மைல் தூரத்தில் இராத்திரி பத்து மணிக்குக் கட்டை வண்டியில் வந்து கொண்டிருந்தபோது முகமூடி அணிந்திருந்த திருடர்கள் ஏழெட்டுப்பேர் வந்து சூழ்ந்து கொண்டு வண்டிக்காரனையும் கிட்டாவய்யரையும் நன்றாக அடித்து விட்டு அவரிடமிருந்த மணிபர்ஸை அபகரித்துக் கொண்டு போய் விட்டார்கள். கிட்டாவய்யர் உடம்பெல்லாம் காயங்களுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அன்றிரவே அவருக்குக் கடுமையான சுரமும் வந்துவிட்டது.

இந்தச் செய்தியை அறிந்ததும் தேவபட்டிணத்திலிருந்து பட்டாபிராமனும் லலிதாவும் குழந்தைகளுடன் புறப்பட்டு வந்தார்கள். இரண்டு நாள் இருந்துவிட்டுப் பட்டாபிராமன் போய் விட்டான். கிட்டாவய்யரும் சரஸ்வதி அம்மாளும் கேட்டுக் கொண்டதின் பேரில் லலிதாவையும் குழந்தைகளையும் இன்னும் சில நாள் இருந்துவிட்டு வரும்படி சொல்லிப் போனான். ரேழிப் பக்கத்துக் காமரா அறையில் போட்டிருந்த கட்டிலில் கிட்டாவய்யர் படுத்திருந்தார் - அவருக்கு உடம்பு இப்போது சௌகரியமாகி விட்டது. ஆனாலும் முன்போல் எழுந்து நடமாடும் படியான தெம்பு இன்னும் ஏற்படவில்லை, இப்போது அவர் அரைத் தூக்கமாயிருந்தார். வீட்டுக்குள்ளே கூடத்தில் பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால் முதன் முதலில் பார்த்த காட்சியை இன்றைக்கும் பார்க்கிறோம். லலிதாவுக்கு அவளுடைய தாயார் சரஸ்வதி அம்மாள் தலைவாரிப் பின்னிக் கொண்டிருந்தாள். ஆனால் லலிதா முன்னைப் போல் இப்போது சின்ன வயதுக் கன்னிப் பெண் அல்ல. அவள் - இரண்டு குழந்தைகளின் தாயார். அந்தக் குழந்தைகள் இருவரும் - பட்டுவும் பாலுவும் - சற்றுத் தூரத்தில் உட்கார்ந்து பொம்மைகள் நிறையப் போட்டிருந்த ஒரு தமிழ் சஞ்சிகையைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். லலிதாவின் முகமண்டலத்தில் அவ்வளவாகச் சந்தோஷம் குடிகொண்டிருக்கவில்லை. அவளுடைய கண்கள் கலங்கியிருந்தன. மழை பொழியத் தொடங்குவதற்குத் தயாராக இருக்கும் மாரிக்காலத்து இருண்ட மேகங்களை அவளுடைய கண்கள் அச்சமயம் ஒத்திருந்தன. ஏதாவது ஒரு சின்னக் காரணம் ஏற்பட வேண்டியதுதான்; அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் மழை சொரியத் தொடங்கிவிடும். அத்தகைய காரணத்தை ஏற்படுத்திக் கொடுக்க லலிதாவின் தாயார் சரஸ்வதி அம்மாள் இருக்கவே இருந்தாள். லலிதாவின் தலையை வாரிக்கொண்டே தன்னுடைய மனக்குறைகளையும் அந்த அம்மாள் வெளியிட்டுக் கொண்டிருந்தாள்.

"இறுக்கம் தாங்கவில்லை; ஆனால் பாழும் மழை மட்டும் பெய்ய மாட்டேன் என்கிறது! வயல்களில் பயிரெல்லாம் காய்கிறதாம்! தெய்வம் எப்போது கண் திறந்து பார்க்குமோ தெரியவில்லை. இந்தக் கலியுகத்தில் தெய்வத்துக்கே சக்தி இல்லாமல் போய் விட்டது போல் தோன்றுகிறது. இல்லாவிட்டால் இந்த மாதிரி அக்கிரமங்கள் எல்லாம் உலகத்தில் நடக்குமா? உங்கள் அப்பா பெயரைச் சொன்னால் நாடு நகரமெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்த உலகம் உண்டு. இப்போது அவருடைய வண்டியைத் திருடர்கள் வழி மறித்து அடித்துப் பணப் பையைப் பிடுங்கிக்கொள்ளும் காலம் ஏற்பட்டுவிட்டது. ஒரு அதிகாரம், ஒரு அத்து - இப்போதெல்லாம் கிடையாது. பயம் என்பதே இல்லாமல் போய்விட்டது." லலிதா குறுக்கிட்டு, "அம்மா, ஊரெல்லாம் அப்பா பெயரைக் கேட்டுப் பயந்து கொண்டிருந்த காலத்திலும் நீ மட்டும் பயப்பட வில்லையே? எதிர்த்துப் பேசிக்கொண்டுதானே இருந்தாய்!" என்றாள். "நன்றாயிருக்கிறதடி நீ சொல்வது! என் மாதிரி புருஷனுக்குப் பயந்து எல்லாரும் நடந்தால் போதாதா? ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசுவதற்குக் கூடப் பயந்து பயந்து இருந்த படியால் தான் இந்தக் குடும்பம் இந்தக் கதிக்கு வந்தது! நான் மட்டும் எதிர்த்துப் பேசியிருந்தேனானால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? உன்னுடைய கலியாணத்தையே எடுத்துக்கொள்! என் இஷ்டப்படி விட்டிருந்தால் இந்த இடத்தில் உன்னைக் கொடுத்திருப்பேனா? கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கிறது என்று சொல்வார்கள். அந்த மாதிரி உன்னுடைய கதி ஆகிவிட்டது!...."

"ஏதாவது உளறாதே, அம்மா குழந்தைகளின் காதில் விழப்போகிறது." "விழுந்தால் என்ன? நன்றாய் விழட்டும். உன் பெண்ணும் பிள்ளையும் வேண்டுமானால் மாப்பிள்ளையிடம் போய்ச் சொல்லட்டும். எனக்கு ஒருவரிடத்திலும் பயம் கிடையாது. காங்கிரஸாம்! காந்தியாம்! இரண்டு வருஷம் ஜெயிலிலே இருந்து விட்டு வந்தாராம்! எதற்காக ஜெயிலுக்குப் போக வேணும்! திருடினாரா? கொள்ளையடித்தாரா? மாப்பிள்ளைக்குப் போட்டியாக இந்தப் பிராமணரும் ஜெயிலுக்குப் போய்விடுவாரோ என்று எனக்குப் பயமாயிருந்தது. ஏதோ நான் செய்த பூஜா பலத்தினால் அந்த ஒரு அவமானம் இல்லாமற் போயிற்று. உன் அகத்துக்காரர் இரண்டு வருஷம் ஜெயிலில் இருந்து விட்டுத்தான் வந்தாரே? என்ன பலனைக் கண்டார்? சில பேர் காங்கிரஸிலே சேர்ந்து ஜெயிலுக்குப் போய் வந்து விட்டு மெம்பர், கிம்பர் என்று ஆகிச் சம்பாதித்து வருகிறார்களே? அப்படியாவது ஏதாவது உண்டா? அதுவும் கிடையாது...""அம்மா! இவர் மற்றவர்களைப்போல் சட்டசபை மெம்பர் ஆவதற்காகவோ, வேறு உத்தியோகப் பதவிக்காகவோ ஜெயிலுக்குப் போகவில்லை; சுயராஜ்யத்துக்காகப் போனார்!...." "சரி அப்படியாவது சுயராஜ்யம் வந்ததா? சொல்லேன், பார்ப்போம்! யுத்தத்திலே ஹிட்லர் ஜெயித்துவிடப் போகிறான் - இங்கிலீஷ்காரன் வாயிலே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டு போய்விடப் போகிறான் என்று எல்லோருமாகச் சேர்ந்து சொன்னீர்கள். உன் அண்ணா சூரியா இருக்கிறானே, அந்தச் சமர்த்துப் பிள்ளை, உன் அப்பாவைப் பட்டாமணியம் வேலையை விட்டுவிட வேண்டும் என்று சொன்னான் கடைசியில், என்ன ஆயிற்று?

சுயராஜ்யத்தையும் காணோம், கியராஜ்யத்தையும் காணோம். அதுதான் போனாற் போகிறது என்றால், இப்போதாவது மாப்பிள்ளை கோர்ட்டுக்குப் போய் நாலு பணம் சம்பாதிக்கலாம் அல்லவா? வக்கீல் வேலைக்கு படித்துவிட்டு வீட்டிலே கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தால் என்ன பிரயோஜனம்? இல்லையென்றால், ஏதாவது உத்தியோகமாவது தேடிக்கொள்ள வேணும். சும்மாயிருந்தால் எப்படி ஜீவனம் நடக்கும். நீயோ சம்சாரியாகி விட்டாய்! இங்கேயாவது முன்னைப் போல் கொட்டிக்கிடக்கிறதா? பணத்தினால் காசினால் அதிகம் செய்ய முடிகிறதா? அப்படிச் செய்தால்தான் என்ன? உனக்கு வைத்துக் கொண்டு வாழத் தெரியவில்லை. அவர்தான் சொன்னார் என்று ஒரு தங்க ஒட்டியாணத்தை விற்றுவிட்டேன் என்று சொல்கிறாயே? உன்னுடைய சமர்த்தை என்னவென்று சொல்லுவது? கட்டிய பெண்டாட்டிக்கு ஒரு புருஷன் புதிதாக நகை பண்ணி போடாவிட்டாலும், ஏற்கெனவே பண்ணிய நகையை விற்பானோ! இது என்னடி வெட்கக்கேடு...?"

"அம்மா! இப்படியெல்லாம் நீ அவரைப் பற்றிக் குறை சொல்வதாயிருந்தால், இரண்டு நாளைக்குப் பிறகு போகிறவன் இன்றைக்கே புறப்பட்டு விடுகிறேன்..." என்றாள் லலிதா. "போ!போ! இந்த நிமிஷமே புறப்பட்டுவிடு! என் தலையெழுத்து அப்படி. நான் யாருக்கு என்னமாய் உழைத்தாலும் என் பேரில் யாருக்கும் ஈவிரக்கம் கிடையாது. தான்பெற்ற பிள்ளையும் பெண்ணும் தனக்கே சத்துரு என்றால், அது லையெழுத்துத் தானே? பத்து மாதம் நான் உன்னை வயிற்றில் சுமந்து பெற்றெடுக்கவில்லையா? பெற்ற தாயாருக்கு ஒரு வார்த்தை சொல்லுவதற்குப் பாத்தியதை கிடையாதா?" "என்னை நீ எவ்வளவு வேணுமானாலும் சொல், அம்மா! பொறுத்துக் கொள்கிறேன். ஆனால் அவரைப் பற்றி ஒன்றும் சொல்லாதே! நீ தானே அவரைத் தேடி என்னை அவருக்குக் கலியாணம் செய்து கொடுத்தாய்? இப்போது குறை சொல்லுவதில் என்ன பிரயோஜனம்?" என்று கேட்டாள் லலிதா. "நான் ஒன்றும் இந்த மாப்பிள்ளையைத் தேடிப் பார்த்துப் பிடித்துக் கொண்டு வரவில்லை. உன் அண்ணா சூரியா சொன்னான் என்று உன் அப்பா ஏற்பாடு செய்துவிட்டார். ஆயிரம் ரூபாய் சம்பளக்காரனை நான் உனக்காக வரன் பார்த்திருந்தேன். கொடுத்து வைக்கவில்லை, பம்பாயிலிருந்து அந்த மகராஜி - உன் அத்தை, - சரியான சமயம் பார்த்து அந்தப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள். பெண்ணைப் பார்க்க மாப்பிள்ளை வருகிற சமயத்தில் வீட்டில் வேறு பெண் இருக்ககூடாது என்று முட்டிக் கொண்டேன்.

என் பேச்சை யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. நான் என்ன இங்கிலீஷ் படித்தவளா? நாகரிகம் தெரிந்தவளா? பட்டிக்காட்டு ஜடம் தானே; என் பேச்சை யார் கேட்பார்கள்? ஆனாலும் இந்தப் பட்டிக்காட்டு ஜடம் சந்தேகப்பட்டுச் சொன்னது போலவே நடந்துவிட்டது. உன்னைப் பார்ப்பதற்காக வந்தவனை உன் அத்தங்கா சீதா மயக்கிவிட்டாள். அவளிடம் என்ன மோகனாஸ்திரம் வைத்திருந்தாளோ, என்ன சொக்குப்பொடி வைத்திருந் தாளோ தெரியாது. வந்தவனும் பல்லை இளித்து விட்டான்! உன்னுடைய அதிர்ஷ்டம் கட்டையாகப் போய் விட்டது...." "இல்லவே இல்லை, என் அதிர்ஷ்டம் நன்றாயிருந்தது. அந்த ஆயிரம் ரூபாய் சம்பளக்காரனைச் சீதா கலியாணம் செய்து கொண் டாளே அவளுடைய கதி என்ன ஆயிற்று? அவள் பட்ட கஷ்டமெல்லாம் உனக்குத் தெரியாதா, அம்மா? போன மாதத்திலே கூடச் சித்ரா கடிதம் எழுதியிருந்தாள். சீதாவின் புருஷன் ரொம்பப் பொல்லாதவன், அயோக்கியன் என்று. அதையெல்லாம் சொல்லக்கூட எனக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு என்னைக் கலியாணம் பண்ணிக் கொடுத்திருந்தால் நானும் சீதாவைப் போலத்தானே கஷ்டப்பட வேண்டும்?" என்றாள் லலிதா. "அப்படி ஒன்றும் கிடையாது, அந்தப் பெண் சீதாவுக்குத் துக்கிரி ஜாதகம். அதனாலே அவள் போன இடம் அப்படியாயிற்று. உன்னை அந்த வரனுக்குக் கொடுத்திருந்தால் இப்போது ராஜாத்தி மாதிரி இருப்பாய்!"

"என்னுடைய ஜாதகம் அதிர்ஷ்ட ஜாதகமாயிருந்தால், நான் வாழ்க்கைப்பட்ட இடத்தில் சுபிட்சமாயிருக்க வேண்டுமே? அவ்விதம் ஏன் இல்லை?" என்று கேட்டாள் லலிதா. "உன் அரட்டைக் கல்லிக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. நீ போன இடத்தில் இப்போது என்ன குறைந்து போய்விட்டது? வீடு, வாசல், பணம், சொத்து, எல்லாந்தான் இருக்கிறது. நாமாகக் கஷ்டத்தை வரவழைத்துக் கொள்வதற்கு அதிர்ஷ்டம் என்ன செய்யும்? ஜாதகம் என்ன செய்யும்? உன் தங்க ஒட்டியாணத்தை விற்றுத்தான் சாப்பிடவேண்டும் என்று ஆகிவிடவில்லை. மாப்பிள்ளைக்கு ஏதோ கிறுக்குப் பிடித்திருக்கிறது. நீயும் சேர்ந்து கூத்தடிக்கிறாய்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். "சரி, அம்மா, சரி! தலை பின்னியாகி விட்டதோ இல்லையோ? போதும், விடு!" என்றாள் லலிதா. இவ்வளவு நேரமும் சரஸ்வதி அம்மாள் தன்பெண்ணின் கூந்தலைவாரி ஜடை போட்டுக் கொண்டி ருந்தாள். கூந்தலை விட்டுவிட்டால் அப்புறம் லலிதாவை உட்கார வைத்துத் தன் மனக் குறைகளைக் கேட்கச் செய்ய முடியாது என்று சரஸ்வதி அம்மாளுக்குத் தெரிந்திருந்தது. ஆகையினாலேயே சிறிதும் அவசரப்படாமல் சாவகாசமாகக் கூந்தலை வாரிப் பின்னி விட்டாள். அவள் தலை முடிந்த சமயத்தில் வாசலில் "தபால்!" என்ற சத்தம் கேட்டது. லலிதா உடனே அம்மாவின் பிடியிலிருந்து தலைப் பின்னலைப் பலவந்த மாகத் திமிறி விடுவித்துக்கொண்டு எழுந்தாள். "இவ்வளவு வயதாகியும் உன் சுபாவம் மட்டும் மாறவில்லை. அந்த நாளில் திமிறிக் கொண்டு ஓடியது போலவே இப்போதும் ஓடுகிறாய். நல்லவேளையாகத் தபால் ஆபீஸுக்கே ஓடிப் போகாமல் வீட்டு வாசலோடு நிற்கிறாயே, அதுவரையில் விசேஷந் தான்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். அவளுடைய வார்த்தைகளை அரைகுறையாகக் காதில் வாங்கிக் கொண்டு லலிதா வாசற்பக்கம் சென்றாள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

இரண்டாம் அத்தியாயம்
"சீதா வருகிறாள்!"

வாசலில் வந்து நின்று "தபால்!" என்று சத்தமிட்ட போஸ்டுமேன் வயதான மனிதர். அவர் லலிதாவை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்துவிட்டு "நீங்கள்தானா அம்மா, லலிதா பட்டாபிராமன் என்கிறது?" என்று கேட்டார். "ஆமாம்!" என்று சொல்லி லலிதா கையை நீட்டினாள். போஸ்டுமேன் கடிதத்தை அவள் கையில் கொடுத்துவிட்டுப் போனார். கடிதத்தின் மேல் விலாசம் கணவருடைய கையெழுத்திலே இருக்கிறது என்பதை லலிதா கவனித்துவிட்டு ஆவலுடன் உறையைப் பிரித்தாள். அதற்குள்ளே இரண்டு கடிதங்கள் இருந்தன. ஒன்று கணவர் எழுதியிருப்பதுதான் இன்னொன்று ஆகா!- சீதாவின் கையெழுத்துப் போல அல்லவா இருக்கிறது? இருக்கட்டும்; முதலில் இவருடைய கடிதத்தைப் படிக்கலாம்:-

"சௌ. லலிதாவுக்கு ஆசீர்வாதம்.
"உனக்குக் கடிதம் எழுத ஆரம்பிக்கும் போது, 'என் ஆருயிரே!' 'அன்பின் சிகரமே!' 'காதற் கனிரசமே வாழ்வின் துணைவியே' என்றெல்லாம் எழுத ஆரம்பிக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். ஆனால் எழுதும்போது அதெல்லாம் வருவதில்லை, பழைய கர்நாடக பாணியில்தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இங்கே நான் சௌக்கியமாகவும் சௌகரியமாகவும் வந்து சேர்ந்தேன். யாரும் என்னை வழிமறித்து மணிபர்ஸைப் பறிக்கவில்லை. அப்படி யாராவது பறித்திருந்தாலும் அதிகமாக அவர்களுக்கு ஒன்றும் கிடைத்திராது. ஒரு ஆளுக்குத் தேவபட்டணத்துக்கு ரயில் சார்ஜும் மேலே ஒன்றரை அணாவுந்தான் கிடைத்திருக்கும். ஏமாந்து போயிருப்பார்கள்! நல்ல சமயம் பார்த்துச் சமையற்கார அம்மா லீவு வாங்கிக் கொண்டு விட்டாள். நான்தான் இப்போது சமையல் செய்கிறேன். சமையல் 'பஸ்ட் கிளாஸ்' என்று உன் தம்பி சுண்டு சர்டிபிகேட் கொடுக்கிறான். நான் இரண்டு வருஷம் ஜெயிலில் இருந்ததில் என்ன பிரயோஜனம் வேண்டும்? ஜெயிலில் இருந்திராவிட்டால் சமையல் செய்யக் கற்றுக் கொண்டிருக்க முடியுமா? வீட்டில் நான் சமையற்கட்டிற்குள் வந்தாலே நீங்கள் எல்லாரும் குடி முழுகிப் போனதுபோல் கூச்சல் போடுவீர்களே? போகட்டும்.'அத்திம்பேருக்கு ஒத்தாசையாயிரு!" என்று நீ சுண்டுவிடம் சொல்லி அனுப்பினாயல்லவா? சுண்டு எனக்கு மிகவும் ஒத்தாசையாக இருந்து வருகிறான்.

நேற்றுக் குழம்பை அடுப்பிலே கவிழ்த்து விட்டான்! 'போதும் அப்பா, உன் ஒத்தாசை! நீ சும்மா இருந்தால், அதுவே பெரிய உதவியாயிருக்கும்!' என்று சொன்னேன். சுண்டு ஒத்தாசைக்கு வந்துவிடப் போகிறானே என்று எனக்கு இப்போது ஒரே பீதியாக இருக்கிறது. உன் தாயார் ஒட்டியாணத்தை மறந்து விட்டாளா, இல்லையா? அது தங்க ஒட்டியாணம் அல்ல - முலாம் பூசிய பித்தளை ஒட்டியாணம் என்பதையும், அதை நான் விற்றுவிடவில்லை - தானம் கொடுத்தேன் என்பதையும் உன் அம்மாவிடம் சொல்லிவிட்டாயா? சொன்னால் ஒருவேளை அவளுடைய கோபம் இன்னும் அதிகமாகி விடுமோ, என்னமோ? உன் தாயாரின் சமாசாரம் உனக்குத்தான் தெரியும். ஆகையால் உன்னுடைய உசிதப்படி செய்துகொள். மாமாவுக்கு இப்போது உடம்பு நன்றாய்ச் சௌகரியமாகியிருக்கும் என்று நம்புகிறேன். அவருக்கு இப்படிப்பட்ட கஷ்டம் வந்ததை நினைத்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது. நம்முடைய சூரியா சொன்ன யோசனையைக் கேட்டு நடந்திருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும். இந்த மாதிரியெல்லாம் பொருள் நஷ்டமும் மனக் கஷ்டமும் ஏற்பட்டிருக்குமா? எல்லாம் கடவுளுடைய செயல்! நீ எப்போது புறப்பட்டு வருவதாக உத்தேசம்? கூடிய சீக்கிரம் வந்துவிடுவது நல்லது. நீ சீக்கிரம் வரவேண்டியதற்கு ஒரு முக்கிய காரணத்தை இத்துடன் இருக்கும் கடிதத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்வாய். உன் தோழி சீதா உன்னைப் பார்க்க வருவதாகச் சொல்லிப் பயமுறுத்தியிருக்கிறாள். அவள் வரும்போது நீ இங்கே இல்லாமல் இருந்தால் என்னால் என்ன செய்ய முடியும்? அதைப் பற்றி நினைத்தாலே எனக்குப் பயமாயிருக்கிறது. ஸ்ரீமதி சீதா புது டில்லி முதலான இடங்களில் இருந்து நாகரிக வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவள். நானோ சுத்தக் கர்நாடக மனிதன். ஆகையால் ஸ்ரீ மதி சீதா தேவியை வரவேற்று உபசரிக்கும் விதம் எனக்கு எவ்விதம் தெரியும்? ஆகையினால் இந்தக் கடிதம் பார்த்தவுடன் அப்பா - அம்மாவிடம் நல்லபடியாகச் சொல்லி விடைபெற்றுக் கொண்டு வந்து சேரவும். சீமாச்சுவய்யர் உன்னைப் பத்திரமாக அழைத்துக் கொண்டு வந்து விடுவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
இங்ஙனம்.
பட்டாபிராமன்"

மேற்படி கடிதத்தைப் படித்து வந்த போது அதில் பல விஷயங்கள் எழுதியிருந்த போதிலும், "சீதா வருகிறாள்!" என்னும் ஒரு விஷயமே லலிதாவின் மனதில் தங்கியது. கணவன் கடிதத்தைப் படித்து முடித்ததும் அடங்கா ஆர்வத்துடன் சீதாவின் கடிதத்தைப் படிக்கத் தொடங் கினாள். அப்போது காமரா அறையிலிருந்து, "லலிதா!" என்று அப்பா அருமையாக அழைக்கும் குரல் கேட்கவே, லலிதா கடிதத்தைப் படித்த வண்ணமே உள்ளே சென்றாள். அவளைப் பார்த்ததும் கிட்டாவய்யர், "லலிதா! எனக்கு ஏதாவது கடிதம் உண்டா? கையில் இரண்டு கடிதம் வைத்திருக்கிறாய்ப் போலிருக்கிறதே! இரண்டும் உனக்கு வந்தது தானா? யார் கடிதம் எழுதியிருக்கிறார்கள்?" என்று கேட்டார். "ஒரு கடிதம் தேவபட்டணத்திலிருந்து இவர் எழுதியிருக்கிறார். இன்னொன்று அத்தங்கா சீதா எழுதிய கடிதம் அப்பா! கல்கத்தாவில் சித்ராவின் வீட்டிலிருந்து எழுதியிருக்கிறாள். சீக்கிரத்தில் அவளுடைய பெண்ணைப் பார்க்க மதராஸுக்கு வருகிறாளாம். அப்படியே தேவபட் டணத்துக்கு வருவதாக எழுதியிருக்கிறாள்..." "ஓகோ! அப்படியா! சீதா கடிதம் எழுதியிருக்கிறாளா? பாவம்! கொஞ்ச நாளாய் அவளைப்பற்றி ஒரு தகவலும் தெரியாம லிருந்தது. அவளை ஒரு தடவை பார்க்க வேண்டும் என்ற சபலம் எனக்குக்கூட உண்டு. அவளைப் பார்த்துச் சில புத்திமதிகள் சொல்ல வேண்டும் என்று இருக்கிறேன். தேவபட்டணத்துக்குச் சீதா வந்தால் இங்கேயும் ஒரு தடவை வரச் சொல்கிறாயா, லலிதா! எனக்குத்தான் இன்னும் ஒரு மாதம் வெளியில் புறப்பட முடியாது போலிருக்கிறது!" என்றார் கிட்டாவய்யர்.

"ஆகட்டும், அப்பா! வரச் சொல்லுகிறேன். இப்போது நான் ஊருக்குப் புறப்படலாமா, அப்பா! சீதா வருகிறதாக எழுதியிருக்கிறபடியால் என்னைச் சீக்கிரம் புறப்பட்டுச் வரச் சொல்லி இவர் எழுதியிருக்கிறார். உங்களை இப்படி விட்டு விட்டுப் போக மனது கஷ்டமாய்த்தானிருக்கிறது. ஆன போதிலும்...." நீ போக வேண்டியதுதான், லலிதா! சீக்கிரம் புறப்பட வேண்டியதுதான். மாப்பிள்ளை இரண்டு வருஷம் ஜெயிலில் இருந்து விட்டு இப்போதுதான் வந்திருக்கிறார். அவரை எத்தனை நாள் நீ தனியாக விட்டுவிட்டு இருக்க முடியும்? சீதாவும் வருகிறதாகச் சொல்லியிருக்கிற படியால் அவசியம் போகத்தான் வேண்டும். எனக்குக்கூட ஒவ்வொரு சமயம் தேவபட்டணத்துக்கே வந்துவிடலாமா என்று தோன்றுகிறது. இந்த ஊரில் எனக்கு இனிமேல் நிம்மதியிராது! எங்கேயாவது போனால்தான் மனது சாந்தம் அடையும்." "அதற்கென்ன, அப்பா! பேஷாக வாருங்கள்! நீங்கள் தேவபட்டணத்துக்கு வருவதற்கு யாரைக் கேட்கவேணும்! - நான் நாளைக்குப் புறப்படுகிறேன். இன்றைக்கு அவருக்கு ஒரு பதில் எழுதி விட்டு வருகிறேன். தபால் ஆபீஸில் தபால் கட்டும் சமயம் ஆகிவிட்டது!" இவ்விதம் சொல்லிவிட்டு லலிதா உள்ளே போய்க் கடிதம் ஒன்று எழுதத் தொடங்கினாள். அப்போது அவளுடைய செல்வக்குமாரி பட்டுவும் அவளுடைய புத்திரன் பாலசுப்பிரமணியனும் அம்மாவின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். "அம்மா! அப்பாவிடமிருந்து கடிதம் வந்திருக்கிறதா?" என்று பட்டு மெதுவாகக் கேட்டாள். "ஆமாம்; இந்தா! படி!" என்று லலிதா கடிதத்தை எடுத்துப் பட்டுவிடம் கொடுத்தாள். பட்டு தட்டுத் தடுமாறி அதில் ஒரு வரி படித்துவிட்டு, "அப்பா கோணலும் மாணலுமாய்க் கிறுக்கித் தள்ளுகிறார் எனக்குப் புரியவில்லை. இந்த இன்னொரு கடிதம் யார் எழுதியது!" என்று கேட்டாள்.

"அதுவா? சீதா அத்தங்கா எழுதியது!" என்றாள் லலிதா. "சீதா அத்தங்கா என்றால் யார்?" என்று பட்டு கேட்டாள். "சீதா அத்தங்கா என்னுடைய அத்தையின் மகள். ரேழி அறையில் தாத்தா படுத்துக் கொண்டிருக்கிறார், பாரு! அவருக்கு ஒரு தங்கை இருந்தாள். அவள்தான் எனக்கு அத்தை, அவளுடைய பெண் சீதா! சீக்கிரத்தில் உங்கள் இரண்டு பேரையும் பார்ப்பதற்கு வருவதாகச் சொல்லியிருக்கிறாள். அதற்குள்ளே நீங்கள் இரண்டு பேரும் ரொம்ப சமர்த்தாக ஆகிவிட வேண்டும். நச்சுபிச்சு என்று வந்தவர்களை ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கக்கூடாது." "இல்லை; நான் கேள்வி கேட்கவில்லை, அம்மா! சீதா அத்தங்காவை நான் பார்த்ததே கிடையாதே! எப்படி அம்மா அவள் இருப்பாள்?" லலிதாவுக்குச் சட்டென்று ஒரு எண்ணம் உதித்தது. பாதி எழுதியிருந்த கடிதத்தை அப்படியே வைத்துவிட்டுக் கூடத்துக் காமிரா அறைக்குள் போனாள். அங்கே இருந்த ஒரு பழைய அலமாரியைத் திறந்து அதில் அடைத்து வைத்திருந்த குப்பை கூலங்களில் கையை விட்டுத் தேடினாள். கடைசியாக, ஒரு மங்கிப் போயிருந்த பழைய போட்டோ படத்தை எடுத்துக் கொண்டு வந்தாள். இரண்டு பக்கமும் இரண்டு குழந்தைகள் உட்கார்ந்திருக்க, அந்தப் புகைப்படத்தைக் காட்டி, "இதோ பார்த்தாயா பட்டு! இதுதான் சீதா அத்தங்கா! இதுதான் நான்! சிறு பிராயத்தில் நாங்கள் இரண்டு பேரும் ரொம்ப சிநேகிதமாயிருந்தோம். எங்களுக்குக் கலியாணம் ஆன சமயத்தில் இந்தப் படம் எடுத்தது. குளத்தங்கரை பங்களாவுக்குப் போய் அடிக்கடி பேசிக் கொண்டிருப்போம். அதையெல்லாம் நினைத்தால் இப்போது சொப்பனம் மாதிரி இருக்கிறது" என்றாள். இந்தச் சமயத்தில் சரஸ்வதி அம்மாள் கிட்டாவய்யருக்குச் சாப்பாடு கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வந்தாள். வரும்போதே, "ஏண்டி லலிதா ! அதென்னடி நான் கேள்விப்படுகிறது? இந்தப் பிராமணர் சொல்கிறது நிஜமா? தேவபட்டணத்துக்குச் சீதா வரப் போகிறாளாமே, வாஸ்தவந்தானா?" என்று இரைந்து கொண்டு வந்தாள்.

"ஆமாம், அம்மா! சீதா வருகிறாள்! அதற்காக நீ ஏன் இவ்வளவு இரைச்சல் போடுகிறாய்?" என்றாள் லலிதா. "நானா இரைச்சல் போடுகிறேன்? அழகாய்த்தானிருக்கிறது. நீ மாத்திரம் என்னிடம் சொல்லாமல் மறைக்கலாமாக்கும்; அந்தத் துக்கிரி இப்போது எதற்காக வருகிறாள்? யார் அவளை வரச் சொன்னார்கள்? அவள் வரவில்லையென்று யார் அழுதார்கள்? லலிதா! நான் சொல்லுகிறதைக் கேள், இங்கே இப்போது சௌகரியமில்லை. ஆகையால் வரவேண்டாம் என்று உடனே கடிதம் எழுதிப் போட்டுவிடு!" "அம்மா! சீதா இந்த ஊருக்கு வரவில்லை! என்னையும் என் குழந்தைகளையும் பார்க்கத் தேவபட்டணத்துக்குத்தான் அவள் வருகிறாள். நீ எதற்காக வீணாய்ச் சண்டை பிடிக்கிறாய்!" "அப்படியானால் நான் வேறு, நீ வேறா என்று கேட்கிறேன். நான் உன்னைப் பெற்ற தாயார் இல்லையா? உன்னுடைய குழந்தைகள் என்னுடைய பேரன் பேத்திகள் இல்லையா? ஏன்தான் இப்படி என்னைக் கண்டு கரிக்கிறீர்களோ, தெரியவில்லை..." "உனக்குச் சீதா அத்தங்காவை எப்போதும் பிடிக்கிறது கிடையாது; அதனாலேதான் சொன்னேன்." "அதனாலேதான் நானும் கேட்கிறேன். எனக்குப் பிடிக்காதவள் உனக்கு மட்டும் எதற்காகப் பிடித்திருக்க வேணும்? நான் சொல்கிறதைக் கேள், லலிதா! அவள் ரொம்ப துக்கிரி; மனதில் நல்ல எண்ணம் கிடையாது. பாம்புக்குப் பாலை கொடுத்தாலும் அது விஷத்தைத்தான் கக்கும். இந்தச் சமயம் தேவபட்டணத்துக்குக்கூட வரவேண்டியதில்லை என்று உடனே எழுதிவிடு. இன்றையத் தபாலிலேயே கடிதத்தைச் சேர்த்துவிடு. தெரிகிறதா?...." இந்தச் சமயத்தில் வாசலில் மாட்டு வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. "வண்டிச் சத்தம் கேட்கிறதே! யார் வந்திருப்பார்கள்! நேற்றைக்கு முற்றத்தில் காக்காய் கத்தியபோதே எனக்குத் தெரியும், யாராவது விருந்தாளிகள் வந்து நிறபார்கள் என்று. பட்டு! நீ போய்ப் பாரடி அம்மா!" பட்டுவோடு லலிதாவும் எழுந்து வாசற் பக்கம் போனாள். வண்டியிலிருந்து இறங்கியவர்களைப் பார்த்ததும் லலிதாவின் அதிசயமும் மகிழ்ச்சியும் அளவு கடந்து பொங்கின.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

மூன்றாம் அத்தியாயம்
டாக்டரின் உத்தரவு

வண்டியிலிருந்து இறங்கியவர்கள் சீதாவும் சூரியாவும் சுண்டுவுந்தான். ஆனால் சூரியாவையும் சுண்டுவையும் லலிதா அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. அவர்களுடன் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டுச் சீதாவின் கைகளைப் பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டு சென்றாள். "உன்னைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தேன். நம்முடைய கல்யாணத்தின்போது நாம் இரண்டுபேரும் தனியாக உட்கார்ந்து போட்டோ எடுத்துக் கொண்டோ ம், பாரு! அதைப் பட்டுவுக்கும் பாலுவுக்கும் இப்பத்தான் காட்டிக் கொண்டிருந்தேன். பட்டு என் பெண்; பாலு என் பிள்ளை. அவர்களுக்கு உன்னைப் பற்றி சொல்லிக் கொண்டேயிருந்தேன். சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாசலில் வண்டி வந்து விட்டது. வண்டியில் யார் வந்திருப்பார்கள் என்று வெளியே வந்து பார்த்தால் நீ இறங்குகிறாய், என்ன அதிசயத்தைச் சொல்வது? சற்று முன்னாலேதான் போஸ்டுமேன் கடிதம் கொண்டு வந்து கொடுத்தான். உன்னுடைய கடிதத்தைப் பிரித்துப் பார்த்துவிட்டு அனுப்பியிருந்தார். நீ வருவதற்குள் நான் அங்கே வந்துவிட வேண்டுமென்று எழுதியிருந்தார். நீ புது டில்லியிலும் கல்கத்தாவிலும் இருந்து நாகரிக வாழ்க்கை வாழ்ந்தவளாம். உன்னை உபசரிப்பதற்கு இவருக்குத் தெரியாதாம்! வேடிக்கையாக இல்லையா இவர் எழுதியிருப்பது? நானும் உடனே திரும்பிவிடுவது என்றுதான் தீர்மானித்து அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்பா உன்னைப் பார்க்கவேண்டும் என்று சொன்னார். இங்கே ஒரு தடவை உன்னை அனுப்பி வைக்கும்படி சொன்னார். நான் அனுப்புவதற்குள் நீயே வந்துவிட்டாய்!" என்று லலிதா அளவில்லாத ஆர்வத்தோடு வார்த்தைகளைக் கொட்டினாள்.

இதற்குள் அவர்கள் வீட்டுக் கூடத்துக்கு வந்துசேர்ந்தார்கள். அங்கே குழந்தைகள் இருவரும் நின்று அதிசயத்துடனும் சங்கோசத்துடனும் சீதாவை ஏறிட்டுப் பார்த்தார்கள். "இவர்கள்தானே உன் குழந்தைகள்? பட்டுவும் பாலுவும்?" என்று சீதா கேட்டாள். "ஆமாம்; இவர்கள்தான்!" என்று லலிதா கூறிவிட்டுக் குழந்தைகளைப் பார்த்துச் சொன்னாள்: "பார்த்தீர்களா? சீதா அத்தங்காளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேனே? சொல்லி வாய் மூடுவதற்குள்ளே வந்து விட்டாள். அத்தங்காள் ரொம்ப அழகாயிருப்பாள் என்று சொன்னேனோ, இல்லையோ? நான் சொன்னது நிஜமா இல்லையா என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். சீதா! நீ ஜெயிலில் இருந்து இன்னும் எத்தனையோ கஷ்டங்களைப் பட்ட பிறகும் இவ்வளவு அழகாயிருக்கிறாயேடி! உன் அகத்துக்காரர் உன்னை விட்டு எப்படித்தான் பிரிந்திருக்கிறாரோ, தெரியவில்லை! அவருக்கு நன்றாகச் சீமைப் பைத்தியம் பிடித்திருக்கிறது. சீமையில் இப்போது அப்படி என்ன அவசர வேலையாம்! அது போகட்டும், வஸந்தியை ஏன் நீ அழைத்துக் கொண்டு வரவில்லை?" ஏற்கெனவே வாட்டமுற்றிருந்த சீதாவின் முகம் குழந்தை வஸந்தியைப் பற்றிக் கேட்டதும் அதிகமாகச் சுணக்கமுற்றது. "வஸந்தி பள்ளிக்கூடம் போகிறாள். அவளுடைய படிப்பைக் கெடுப்பானேன் என்று அழைத்து வரவில்லை லலிதா! மாமா எங்கே? அவரைப் பார்க்க வேண்டாமா?" என்றாள். "பார்க்காமல் என்ன? பார்க்க வேண்டியதுதான். அப்பா சற்று முன்னால்தான் உன்னைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். நீ வந்தது அவருக்குச் சந்தோஷமாயிருக்கும். அப்பாவுக்கு நேர்ந்த ஆபத்தைப் பற்றித் தெரியுமல்லவா, சீதா?..."

"தேவபட்டணத்துக்கு நேற்றைக்கு வந்ததும் தெரிந்தது. உன் அகத்துக்காரர் அம்மாஞ்சியிடம் சொன்னாராம். அதைக் கேட்டதும் மறுவண்டியில் புறப்பட்டோ ம். உன் அகத்துக்காரர் கூட ஒரு நாள் இருந்துவிட்டுப் போகலாமே என்று சொன்னாராம்..." "சொன்னாராம் என்கிறாயே? உன்னிடம் சொல்லவில்லையா? அவருக்குப் பொம்மனாட்டிகளைக் கண்டாலே ரொம்ப சங்கோசம். ஆனால் உன்னிடம் அவருக்கு ரொம்ப மரியாதை. நீ தேசத்துக்காக ஜெயிலுக்குப் போயிருக்கிறாய் என்று கேட்டதுமுதல் அடிக்கடி உன்னைப்பற்றி விசாரித்துக் கொண்டிருப்பார். இப்போது நீயே வந்து விட்டாய். சீதா! உன் அகத்துக்காரர் சீமையிலிருந்து திரும்பி வரும் வரையில் தேவபட்டணத்தில் எங்கள் வீட்டிலேயே நீ தங்கியிருக்க வேண்டும். வேறு எந்த இடத்துக்கும் போகக்கூடாது. தெரிகிறதா?" "அதைப் பற்றி இப்போது என்ன அவசரம், லலிதா! பிறகு சாவகாசமாகப் பேசிக் கொள்ளலாம். இப்போது மாமாவைப் போய்ப் பார்க்கலாம்!" என்றாள் சீதா. இந்தச் சந்தர்ப்பத்தில் சரஸ்வதி அம்மாள் அங்கு வரவே, "அம்மா! இதோ சீதா அத்தங்கா வந்திருக்கிறாள், பார்த்தாயா?" என்றாள் லலிதா. "நமஸ்காரம், மாமி! சௌக்கியமா?" என்று சீதா பவ்யமாகப் பேச்சை ஆரம்பித்தாள். சரஸ்வதி அம்மாளோ முகத்தைச் சுளுக்கிக்கொண்டு, "வந்தாயாடி, அம்மா! வா! என்னவெல்லாமோ கேள்விப்பட்டேன். மனதுக்கு அவ்வளவு சந்தோஷமாயில்லை. ஏதோ இந்த மட்டும் வந்து சேர்ந்தாயே? மாமாவுக்கு உடம்பு சரியில்லை என்று தெரியுமோ, இல்லையோ? யாராயிருந்தாலும் சரி; அவரிடம் அதிகமாக நச்சு பிச்சு என்று பேசக் கூடாது.

டாக்டரின் உத்தரவு! புது மனுஷாளைக் கண்டால் அவருக்குத் தலைகால் தெரியாமல் போய்விடும் லலிதா! நான் சொல்லுகிறது தெரிகிறதோ, இல்லையோ? அப்பா அதிகமாகப் பேசுவதற்கு இடங்கொடுக்க வேண்டாம்" என்றாள். லலிதாவின் மனம் வேதனை அடைந்தது. அவள் கோபமாக அம்மாவைப் பார்த்தாள். அப்போது சீதா, "மாமி! நான் மாமாவிடம் அதிகமாகப் பேச்சுக் கொடுக்கவில்லை. உடம்பு சரியில்லாதவர்களோடு அதிகமாகப் பேசக் கூடாதென்று அவ்வளவு தூரம் தெரியாதா எனக்கு?" என்றாள். "உனக்குத் தெரியாமலிருக்குமா, அம்மா! நீ மெட்ராஸ், பம்பாய், டில்லி, கல்கத்தா எல்லாப் பட்டணங் களிலும் இருந்தவள். நான் இந்தப் பட்டிக்காட்டிலேயே விழுந்து கிடக்கிறவள். ஏதாவது கொஞ்சம் உடம்பு அதிகம் என்றால் என் தலையிலேதானே விடிகிறது! வயது வேறே ஆகிவிட்டது, முன்னேயெல்லாம்போல் சக்கரமாகச் சுற்றிக் காரியம் செய்ய முடிகிறதா? யாராவது இரண்டு பேர் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்துவிட்டால் எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று பயமாயிருக்கிறது. முன்னைப்போல் சமைக்கப் பரிசாரகனாவது இருக்கிறானா? அதுவும் இல்லை. உன் மாமாவுக்குக் கடன் உடன் அதிகமாகப் போய் விட்டது. பரிசாரகன் வைத்துக் கொள்ளக் கட்டவில்லை!...." "போதும், அம்மா! உன்னுடைய பஞ்சப் பாட்டை அப்புறம் பாடலாம். அத்தங்கா வந்ததும் வராததுமாக இதெல்லாம் எதற்காகச் சொல்லுகிறாய்? எனக்குக் கொஞ்சங் கூடப் பிடிக்கவில்லை! நீ வா, சீதா! மாமாவைப் போய்ப் பார்க்கலாம்!" என்று சொல்லிச் சீதாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனாள் லலிதா.

கிட்டாவய்யர் படுத்திருந்த கட்டிலுக்குப் பக்கத்தில் சூரியாவும் சுண்டுவும் உட்கார்ந்து அவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். லலிதாவும் சீதாவும் அறைக்குள் வந்ததும் அவர்கள் எழுந்தார்கள். "அத்தங்கா! அப்பாவுக்கு நான் வந்ததில்கூட அவ்வளவு சந்தோஷமில்லை. உன்னை அழைத்து வந்ததிலேதான் திருப்தி. உன் கதையையெல்லாம் அப்பாவுக்குக் கேட்க வேண்டுமாம்!" என்று சூரியா சொல்லிவிட்டுச் சுண்டுவையும் அழைத்துக் கொண்டு போனான். மாமாவுக்குச் சீதா நமஸ்காரம் செய்தாள். அவர் உட்காரச் சொன்னதும் உட்கார்ந்தாள். கிட்டாவய்யரும் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து, சீதாவின் தலையை அன்புடன் தொட்டு, "மகராஜியாக இரு!" என்றார். மாமாவை அந்தப் பலவீனமான நிலையில் உடம்பில் காயக்கட்டுகளுடன் பார்த்ததினாலும், "மகராஜியா இரு!" என்ற அவருடைய ஆசீர்வாதம் வேறு பல நினைவுகளை உண்டு பண்ணியதனாலும் சீதாவின் கண்களிலிருந்து கலகலவென்று கண்ணீர் பொழிந்தது. அந்தக் கண்ணீரின் காரணத்தைக் கிட்டாவய்யர் வேறு விதமாக அர்த்தம் செய்து கொண்டார். தம் மனையாள் சீதாவை வரவேற்றுச் சொல்லிக் கொண்டிருந்த வார்த்தைகள் அவருடைய காதிலும் விழுந்து அவருக்கு வருத்தத்தை உண்டு பண்ணியிருந்தன. எனவே அவர் உணர்ச்சி ததும்பிய குரலில், "நீ வருத்தப்படாதே, சீதா! உன் மாமியின் சுபாவந்தான் தெரியுமே! உலகத்தில் எத்தனை எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டு விட்டன. ஆனால் உன் மாமி மட்டும் கொஞ்சங்கூட மாறாமல் அப்படியேயிருக்கிறாள்!"

சீதா கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, "அதற்காக நான் வருத்தப்படவில்லை, மாமா! உங்களை இப்படிப் பார்த்ததும் எனக்குத் துக்கமாயிருக்கிறது. மாமி சொன்னதில் ஒரு குற்றமும் கிடையாது. நான் பிறந்த வேளை அப்படி!" என்றாள். "நீ பிறந்த வேளைக்கு என்ன வந்தது? திவ்யமான நாள் நட்சத்திரத்தில் நீ பிறந்தவள். உனக்கு மலைபோல் வரும் கஷ்டங்கள் எல்லாம் பனிப்போல் நீங்கிவிடும். கொஞ்ச நாளில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி நீ சௌக்கியமாக இருப்பாய்" என்றார் கிட்டாவய்யர். "தங்களுடைய ஆசீர்வாதத்தினால் அப்படியே ஆகட்டும். மாமா! முதலில் தங்களுடைய உடம்பு சௌக்கியமாக வேண்டும். உங்களை யாரோ அடித்துவிட்டார்கள் என்று கேட்டதும் நான் துடித்துப் போய்விட்டேன். ஒரு ஈ காக்காய்க்குக் கூடத் தீங்கு எண்ணாத தங்களை அடித்தவர்கள் எப்பேர்ப்பட்ட சண்டாளப் பாபிகளாய் இருக்கவேண்டும்?" என்றாள் சீதா. "தலைவிதி, அம்மா! தலைவிதி! அதற்கு அவர்களைத் திட்டி என்ன பிரயோஜனம்? சீதா! ஒரு விஷயத்தைக் கேள், திருடர்கள் நான் வந்த வண்டியை வழிமறித்து அடித்தபோது ஒரு அடி படார் என்று மண்டையில் விழுந்தது என் கதி கலங்கியது.

அந்த நிமிஷமே உயிர் போய்விடும் போலத் தோன்றியது. அப்போது நான் என்ன நினைத்தேன் தெரியுமா? என் மனக்கண் முன்னால் யார் வந்தது தெரியுமா? உன் தாயார் ராஜம்மாள்தான் வந்தாள், அவள் எங்கேயோ வானவெளியில் நின்று தன் மெலிந்த கரங்களை நீட்டி, "அண்ணா! வாருங்கள்!' என்று என்னை அழைப்பது போலத் தோன்றியது. அப்போது நான், "அடாடா! குழந்தை சீதாவைப் பார்த்துச் சொல்லிக் கொள்ளாமல் வந்துவிட்டோ மே? சீதா சௌக்கியமா என்று இவள் கேட்டால் பதில் என்ன சொல்வது?" என்று நினைத்துக்கொண்டேன். இவ்வளவும் அடிபட்டுக் கலங்கிய ஒரு நிமிஷ நேரத்தில் என் மனத்தில் நடந்தது?" என்றார் கிட்டாவய்யர். "மாமா! இதிலிருந்து என் பேரிலும் அம்மா பேரிலும் உங்களுக்கு எவ்வளவு அன்பு என்று தெரிகிறது. ஆனால் நீங்கள் அதிகமாகப் பேசவேண்டாம். டாக்டரின் உத்தரவுப்படி நடக்க வேண்டும் அல்லவா?" என்றாள் சீதா. "ஆமாம்; ஒரே மூச்சில் அதிகமாகப் பேசக்கூடாதுதான். உன்னைப் பார்க்கவேண்டும் என்றும் உன்னிடம் சில விஷயங்கள் சொல்ல வேண்டும் என்றும் எவ்வளவோ ஆவலாயிருந்தேன். உன்னைப் பார்க்க முடியாமலே போய்விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நல்லவேளையாக நீயே என்னைப் பார்ப்பதற்கு வந்துவிட்டாய். மற்றதெல்லாம் இராத்திரி சாவகாசமாகப் பேசிக் கொள்ளலாம். நீ இப்போது போய்க் குளித்துவிட்டுச் சாப்பிடு அம்மா!" என்று கிட்டாவய்யர் அருமையுடன் கூறினார்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

நான்காம் அத்தியாயம்
காதல் என்னும் மாயை

சீதாவும் லலிதாவும் அன்று சாயங்காலம் குளத்தங்கரை பங்களாவுக்குச் சென்றார்கள். 'பங்களா'வென்று அந்தக் கட்டிடத்தை முன்னே மரியாதைக்குச் சொல்லக்கூடியதாயிருந்தது. இப்போது அப்படிக்கூடச் சொல்வதற்கில்லை. அந்தக் கட்டிடத்தின் கூரையில் பல துவாரங்கள் காணப்பட்டன. கீழ்த்தரை குண்டும் குழியுமாயிருந்தது. திண்ணைக்குப் பந்தோபஸ்தாகவும் அலங்காரமாகவும் அமைந்திருந்த மூங்கில் பிளாச்சு வேலி பல இடங்களில் முறிந்து விழுந்து கிடந்தது. பங்களாதான் இப்படி என்றால், பங்களாவுக்கு எதிரில் இருந்த குளமும் களை குன்றிக் காணப்பட்டது. குளத்தில் தண்ணீருக்குக் குறைவில்லை. ஆனால் முன்னொரு காலத்தில் கரையோரமாக வளர்ந்திருந்த அலரிச் செடிகளையும் செம்பருத்திச் செடிகளையும் இப்போது காணவில்லை. குளத்தின் படித்துறை பாசி பிடித்தும் இடிந்தும் காணப்பட்டது. சீதாவும் லலிதாவும் குளக்கரையில் இடிந்த படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டார்கள். சிறிது நேரம் சீதா சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேயிருந்தாள். சுற்றுப்புறத் தோற்றத்தில் இன்னும் ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதாக அவளுக்குத் தோன்றிக் கொண்டேயிருந்தது. பளிச்சென்று அது என்ன என்பது புலனாயிற்று. "லலிதா! குளத்தின் மேலக்கரையில் இருந்த சவுக்கு மரத்தோப்பு எங்கே?" என்று கேட்டாள். "அதை வெட்டி விறகுக்கு விற்றாகிவிட்டது?" என்றாள் லலிதா. "அதனால்தான் இந்தப் பக்கமெல்லாம் இப்படி பார்ப்பதற்கு வெறிச்சென்று இருக்கிறது. சவுக்குத் தோப்பை வெட்டி விட்டபடியால் இந்தக் குளக்கரையின் அழகே போய் விட்டது. இப்போது என்னுடைய வாழ்க்கை சூனியமாயிருப்பதுபோல் இந்தப் பிரதேசமும் சூனியமாயிருக்கிறது!" என்று சொல்லிச் சீதா பெருமூச்சு விட்டாள்.

"நீ இப்படிப் பேசுவது எனக்குப் புரியவேயில்லை! டில்லியிலிருந்து நீ கடைசியாக எழுதிய கடிதங்களும் எனக்குச் சரியாக அர்த்தமாகவில்லை! உனக்கென்ன வருத்தம், சீதா! ஏன் இப்படி வாழ்க்கையையே வெறுத்தவள்போல் பேசுகிறாய்? அவருக்கும் உனக்கும் ஒத்துக் கொள்ளவில்லையா? இந்த ஊரில் நீங்கள் ஒருவரையொருவர் பார்த்துப் பிரியப்பட்டுக் கலியாணம் செய்து கொண்டீர்களே? இந்தப் பக்கத்து ஊர்களிலெல்லாம் வெகு காலம் வரை உங்களுடைய காதல் கலியாணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்களே, அதெல்லாம் வெறும் பொய்யா? உங்களுக்குள் ஏன் ஒத்துக் கொள்ளவில்லை? உண்மையில் அவருக்கு உன் பேரில் அன்பு இல்லையா?" என்று லலிதா வருத்தமான குரலில் கேட்டாள். "எனக்குத் தெரியாது. அவருக்கு என் பேரில் அன்பு இருக்கிறதா இல்லையா என்பதே எனக்குத் தெரியாது. ஆரம்பத்தி லிருந்தே அவருக்கும் எனக்கும் மத்தியில் ஒரு மாயத்திரை தொங்கிக் கொண்டிருந்தது. அவருடைய மனதை நான் அறிய முடியாமல் அந்தத் திரை மறைத்துக் கொண்டிருந்தது. அந்தத் திரையைத் திறந்து அவருடைய மனதில் உள்ளது என்னவென்பதை அறிந்து கொள்ள நான் பிரயத்தனப் படவேயில்லை. அத்தனை தைரியம் எனக்கு இல்லை. திரையைத் திறந்து பார்த்தால் உள்ளே என்ன இருக்குமோ என்னமோ என்று பயந்தேன். பேய் பிசாசு இருக்குமோ, புலியும் கரடியும் இருக்குமோ, அல்லது விசுவாமித்திரரை மயக்கிய மேனகையைப் போல யாராவது ஒரு மாயமோகினி இருப்பாளோ என்று எனக்குப் பயமாயிருந்தது. ஆகையினால் திரையை நீக்கி அவருடைய மனதை அறிந்து கொள்ள நான் பிரயத்தனப்படவே யில்லை. அப்படிப் பிரயத்தனப்பட்டிருந்தால் ஒரு வேளை நான் கொலைகாரியாகியிருப்பேன். அல்லது கொலையுண்டு செத்துப் போயிருந்தாலும் போய் இருப்பேன்!" என்றாள் சீதா.

"நீ பேசுவது மர்மமாகவும் பயங்கரமாகவும் இருக்கிறது சீதா! நமக்குக் கலியாணம் ஆன புதிதில் இதே இடத்தில் நாம் உட்கார்ந்து எத்தனை நாள் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம்? அவர் உன்னிடம் வைத்த காதலைக் குறித்து எவ்வளவு பூரிப்புடன் பேசிக் கொண்டிருந்தாய்? அதையெல்லாம் கேட்கக் கேட்க எனக்கும் எத்தனையோ சந்தோஷமாயிருந்தது. என்னுடைய கணவர் என்னிடம் அப்படியெல்லாம் இல்லையே என்றெண்ணி ஏமாற்றமும் அடைந்தேன். இப்போது நீ பேசுவதைப் பார்த்தால் எல்லாம் பொய் என்று பெரியவர்கள் சொல்லுவது உண்மைதான் போலிருக்கிறது" என்று லலிதா கூறினாள். "அதில் சந்தேகமில்லை, லலிதா! பெரியவர்கள் இந்த உலகத்தை 'மாய உலகம்' என்று சொல்லுவது சரிதான். இந்த மாய உலகத்தில் காதல் ஒன்றுதான் உண்மையானது என்று சிலர் சொல்லுவதுண்டு. நாவல்களிலும், நாடகங்களிலும், சினிமாக்களிலும் இப்படிச் சொல்வார்கள். அதைப் போல மூடத்தனம், பைத்தியக்காரத்தனம் - வேறொன்றும் கிடையாது. இந்த மாய உலகத்தில் எத்தனையோ மாயைகள் இருக்கின்றன. எல்லா மாயைகளிலும் பெரிய மாயை காதல் என்பதுதான். என்னுடைய பெண்ணுக்கும் உன்னுடைய பெண்ணுக்கும் கொஞ்சம் வயதாகும்போது, அதுவரை நான் உயிரோடிருந்தால், அவர்களிடம் சொல்லப் போகிறேன். கதைகளைப் படித்து விட்டும் நாடகங்களையும் சினிமாக்களையும் பார்த்துவிட்டும் காதல், கீதல் என்று பைத்தியக்கார எண்ணம் எண்ணிக் கொண்டிராதீர்கள். பெரியவர்கள் பார்த்துச் செய்து வைக்கும் கலியாணத்திலேதான் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாயிருக்கலாம் என்று சொல்லப் போகிறேன். காதல் என்பது வெறும் மாயை என்பதற்கு என்னையே உதாரணமாகக் காட்டப் போகிறேன்."

"சீதா! உன்னுடைய பேச்சில் எனக்கு இன்னமும் நம்பிக்கை உண்டாகவில்லை! ஏதோ ஒரு பெருந் துக்கத்தினால் அல்லது மனக்கசப்பினால் இப்படிப் பேசுகிறாயோ என்று நினைக்கிறேன். காதல் என்பது மாயை என்றும் பொய் என்றும் சொல்லுகிறாயே? ஆனால் அந்தச் சமயத்தில், நமக்குக் கலியாணம் ஆகும் சமயத்தில், நீ அநுபவித்த சந்தோஷமெல்லாம் பொய் என்று சொல்ல முடியுமா? இந்தக் குளக்கரையில் உட்கார்ந்து நீ சொன்னதெல்லாம் எனக்கு அப்படியே ஞாபகம் இருக்கிறது. அவருடைய பெயரைச் சொன்னால் உன் உடம்பு எப்படிப் பூரித்தது என்பதெல்லாம் எனக்கு நேற்று நடந்ததுபோல் ஞாபகத்துக்கு வருகிறது. அதெல்லாம் வெறும் பொய் என்பதாக நான் இன்னமும் நம்ப முடியவில்லை." "நீ மட்டும் என்ன? என்னால்கூட நம்பமுடியவில்லைதான். லலிதா! அதையெல்லாம் நினைத்தால் இப்போது கூட என் உடம்பு சிலிர்க்கிறது. முதன் முதலில் அவரும் நானும் பார்த்துக் கொண்ட பிறகு, எங்களுடைய ஆசையை வெளியிட்டுக் கொண்ட பிறகு, இந்தப் பூவுலகம் எனக்குச் சொர்க்கலோகமாக மாறியிருந்தது. அவர் முதன் முதலில் என் கரத்தைத் தொட்டுக் கண்களால் ஒற்றிக்கொண்ட பிறகு, அவருடைய காதலைச் சொல்லிவிட்டு நான் சற்றும் எதிர்பாராத நிலையில் என் கன்னத்தில் கன்னி முத்தம் ஈந்த பிறகு, என்னுடைய மனித ஜன்மம் மாறித் தேவ கன்னிகை ஆகியிருந்தேன். அந்த நாட்களில் வானத்து நட்சத்திரங்கள் எல்லாம் என் தேகத்தை அலங்கரித்தன. பூலோகத்துப் புஷ்பங்கள் எல்லாம் என் உடம்பில் மலர்ந்து மணம் வீசின. சந்திர கிரணங்கள் என் தேகத்தை மூடும் சல்லாத்துணி ஆயின. தென்றல் காற்று என் மேனியைக் குளிர்விப்பதற்காகவே வீசிற்று. சந்தனம் எனக்காகவே கந்தம் அளித்தது.

நான் அணிந்த பட்டுப் புடவைகள் என்னுடைய மேனியின் அழகினால் சோபை பெற்று விளங்கின; இதையெல்லாம் நானே உணர்ந்தேன். லலிதா! அவ்வளவும் அப்போது உண்மையாகத்தான் தோன்றியது. 'மாயை' என்றோ 'பொய்' என்றோ ஒரு கணமும் நான் நினைக்கவில்லை. அவர் என்னிடம் அந்த நாளில் வைத்திருந்த ஆசையைத்தான் என்னவென்று சொல்லுவேன் தமயந்தியிடம் நளன் வைத்த ஆசையும் ஜூலியட்டிடம் ரோமியோ வைத்த ஆசையும் லைலாவிடம் மஜ்னூன் வைத்த ஆசையும் அவர் என்னிடம் வைத்திருந்த ஆசைக்கு இணையாகாது என்றே தோன்றியது. வெள்ளி நிற அன்னப்பறவைகள் பூட்டிய புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டு நாங்கள் நீல வானத்தில் நட்சத்திர மண்டலங்களுக்கிடையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தோம். எங்களுடைய ஆனந்த யாத்திரைக்கு அந்தமே கிடையாது என்று எண்ணினேன். ஆனால் ஒரு நாள் அதற்கு முடிவு வந்தேவிட்டது. உன்னையும் என்னையும் போல் பெண்ணாய்ப் பிறந்தவள் ஒருத்தி வந்து எங்கள் ஆனந்த வாழ்க்கையில் குறுக்கிட்டாள். அந்த நிமிஷத்தில் சனியன் பிடித்தது. அவருடைய மனம் பேதலித்தது. என்னுடைய சொர்க்கம் ஒரு நொடிப்பொழுதில் நரகமாக மாறியது. லலிதா! நான் வங்கநாட்டுச் சிறையில் இருந்தபோது ஒரு பாடலைக் கேட்டேன். அது என் மனதை ரொம்பவும் கவர்ந்தது. என் மனதில் உற்சாகம் குன்றித் துயரம் ஏற்படும்போதெல்லாம் அதைப் பாடுவேன். உனக்கு அதை இப்போது பாடிக் காட்டட்டுமா?" என்றாள் சீதா.

"பேஷாய்ப் பாடு! கேட்கவும் வேண்டுமோ? நீ பாடுவது எனக்கு எப்போதுமே பிடிக்குமே! அது வங்காளிப் பாஷைப் பாட்டா?" என்றாள் லலிதா. "நான் கேட்டது வங்காளிப் பாட்டுத்தான்; ஆனால் அதை நானே தமிழ்ப்படுத்தினேன்; கேள்!" என்று சொல்லிவிட்டு சீதா துயரம் ததும்பிய வர்ணமெட்டில் பின்வரும் பாட்டைப் பாடினாள்:-

"பாற்கடல் மீதினில் பசும்பொன் படகினில் பரிந்தேற்றிச் சென்றவர் யார்?

- என்னைப் பரிந்தேற்றிச் சென்றவர் யார்?
காற்றங்கு அடித்திடக் கடல் பொங்கும் வேளையில் கைவிட்டுச் சென்றவர் யார்?
- சகியே கைவிட்டுச் சென்றவர் யார்?
வான வெளியினில் தேனிலவு தன்னில் தானாக நின்றவர் யார்?
- சகியே தானாக நின்றவர் யார்?
தானாக நின்றென்னைத் தாவி அணைத்துப் பின் தனியாக்கிச் சென்றவர் யார்?
- என்னைத் தனியாக்கிச் சென்றவர் யார்?"

இந்தப் பாட்டைப் பாடிவிட்டுச் சீதா விம்மி விம்மி அழத்தொடங்கினாள். லலிதா அவளை அன்புடன் அணைத்துக் கொண்டு பலவிதமாக ஆறுதல் கூறினாள். அவ்விதம் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும்போது லலிதா தன் மனத்திற்குள், "ஐயோ! பாவம்! என்னவெல்லாமோ கஷ்டங்களை அனுபவித்து இவளுடைய மூளையில் கொஞ்சம் கோளாறு உண்டாகி யிருக்கிறது!" என்று எண்ணிக் கொண்டாள்.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

ஐந்தாம் அத்தியாயம்
மாயா மோகினி

உலகமாகிற அரங்க மேடையை மறைப்பதற்கு மெல்லிய இருள் திரை விழுந்து கொண்டிருந்தது. வானத்தின் வடகிழக்கு மூலையில் கரிய மேகங்கள் திரண்டிருந்தன. மேகத் திரளை ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை வரை கிழித்துக்கொண்டு மின்னல் கீற்றுக்கள் ஒரு கணம் ஜொலிப்பதும் மறுகணம் மறைவதுமாயிருந்தன. வாடைக்காற்று ஜில்லென்று வீசியது, தென்னந்தோப்புகளில் தென்னை மட்டைகள் ஆடி உராய்ந்து மர்ம சத்தத்தை உண்டாக்கின. வயல் வரப்பில் மேய்ந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த பசு ஒன்று திடீரென்று கன்றை நினைத்துக் கொண்டு, "அம்மா!" என்று கத்திற்று. பட்டிக்காட்டுச் சங்கீத வித்துவான் ஒருவன். "நாளைக்கு நாளைக்கென் றேதினம் கழியுது! ஞானசபையை எண்ணில் ஆனந்தம் பொழியுது;" என்று பாடிக்கொண்டு சென்றான். கொஞ்ச தூரத்தில் இன்னொரு இசைப் புலவன் புல்லாங் குழலில் நாட்டக் குறிஞ்சி ராகத்தை வாசிக்க முயற்சி செய்ய, அது புன்னாகவராளியாக உருக்கொள்ளப் பார்த்தது. சற்றுத் தூரத்திலிருந்த இலுப்பை மரத்தோப்பில் ஒரு இராத்திரிப் பறவை 'கிரீச்' என்று சத்தமிட்டு விட்டுச் சடபடவென்று இறகுகளை அடித்துக்கொண்டு ஒரு மரத்தின் உச்சியிலிருந்து இன்னொரு மரத்தின் உச்சிக்குப் பறந்து சென்றது. வான விதானத்தில் விண்மீன்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்து எட்டிப் பார்க்கத் தொடங்கின.

சீதாவின் விம்மல் சத்தம் வரவர லேசாக மறைந்தது. "அத்தங்கா! வீட்டுக்குப் போகலாமா?" என்று லலிதா கேட்டாள். "லலிதா! எனக்கு வீடு எங்கேயிருக்கிறது போவதற்கு?" என்று சொன்னாள் சீதா. "நான் உயிரோடிருக்கும் வரை என்னுடைய வீடு உன்னுடைய வீடுதான்!" என்றாள் லலிதா. உன்னுடைய நல்ல மனதை நான் அறிவேன், லலிதா! அதனாலேதான் உன்னைத் தேடி வந்தேன். ஆயினும் பெண்ணாகப் பிறந்தவளுக்கு அது போதுமா? எவ்வளவுதான் பிராண சினேகிதியாயிருந்தாலும் சொந்த வீட்டில் சுதந்திரமாயிருப்பது போல் இன்னொரு வீட்டில் இருக்க முடியுமா?..." "ஏன் இருக்க முடியாது? பேஷாய் இருக்கலாம். என்னுடைய தேவபட்டணத்து வீட்டில் எனக்கு எவ்வளவு சுதந்திரம் உண்டோ அவ்வளவு உனக்கு உண்டு; இன்னும் அதிகமாகக்கூட உண்டு!" என்றாள் லலிதா. "உன்னுடைய அன்பு காரணமாக இப்படிச் சொல்கிறாய். நீ சொன்னால் போதுமா? உனக்கு எஜமானர் இருக்கிறார் அல்லவா?" "இருந்தால் என்ன? அவர் எஜமானர் என்றால் நான் எஜமானி. அவருக்கு வீட்டில் எவ்வளவு பாத்தியதை உண்டோ அவ்வளவு எனக்கும் உண்டு! என்னுடைய எஜமானரின் நல்ல குணம் உனக்குத் தெரியாது, சீதா! என்னைக் காட்டிலும் அவர் உன்னிடம் அதிக பிரியமாக இருப்பார். அதிலும் நீ தாய்நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டாய் என்றும் சிறையிலே இருந்தாய் என்றும் அவருக்குத் தெரிந்தது முதல் உன்னைச் சிலாகித்து எத்தனையோ தடவை பேசியிருக்கிறார். நீ எங்கள் வீட்டில் எத்தனை நாள் இருந்தாலும் அவருக்குச் சந்தோஷமாகவேயிருக்கும்!" என்றாள் லலிதா.

சீதா, தன் தாய் நாட்டின் விடுதலைக்காகச் சிறை போகவில்லை என்றும், தன்னை இன்னொருத்தி என்று நினைத்துத் தவறாகச் சிறைக்கு அனுப்பிவிட்டார்கள் என்றும் சொல்லிவிட எண்ணினாள். "லலிதா! நீங்கள் எல்லாரும் நினைப்பதுபோல் அப்படியொன்றும் நான் தாய்நாட்டுக்குச் சேவை செய்துவிடவில்லை...." என்று சீதா சொல்ல ஆரம்பித்தாள். "எல்லாம் எனக்குத் தெரியும்! சூரியா அப்போதே எல்லாவற்றையும் விவரமாக எழுதியிருந்தான். ஒன்றுமே செய்யாதவர்கள் எல்லாம் பிரமாதமாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். நீ பிரமாதமான காரியத்தைச் செய்துவிட்டு ஒன்றுமில்லை என்று ஏன் சொல்லிக்கொள்ள வேண்டும்? அடக்கத்துக்கும் எல்லை வேண்டாமா?" என்றாள் லலிதா. ஓஹோ! இவர்கள் எல்லாம் இப்படி நினைப்பதற்குக் காரணம் சூரியாவா? தன்னைப் பெருமைப்படுத்துவதற்காக அவ்விதம் சூரியா எழுதியிருக்கிறான். அதை இப்போது இல்லையென்று சொல்லிச் சூரியாவைக் காட்டிக் கொடுப்பானேன்? தன்னைப்பற்றிச் சிலர் பெருமையாக நினைத்துக் கொண்டால் நினைத்துக்கொண்டு போகட்டுமே? அப்படி நினைப்பதால் யாருக்கு என்ன நஷ்டம்? தான் சொல்ல எண்ணியதைச் சீதா மாற்றிக்கொண்டு, "மற்றவர்கள் செய்யாத காரியம் அப்படி என்ன நான் பிரமாதமாகச் செய்துவிட்டேன்? உன் அகத்துக்காரர் கூடத்தான் சிறையில் இரண்டரை வருஷத்துக்குமேல் இருந்திருக்கிறார்!" என்றாள். "ஆமாம்; அவர் செய்ததை நினைத்தாலும் எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது!" என்றாள் லலிதா. சற்று நேரம் இருவரும் மௌனமாக இருந்தார்கள்.

திடீரென்று லலிதா, "இதுதான் எனக்கு அர்த்தமாகவேயில்லை. உன்னுடைய இல்வாழ்க்கையில் சந்தோஷமில்லை என்று சொல்கிறாயே? கலியாணமான புதிதில் நீ எழுதிய கடிதங்களையெல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறேன். அந்தக் கடிதங்களை நான் அடிக்கடி எடுத்துப் படிப்பதுண்டு. உன்னுடைய கடிதங்களைப் படிக்கும்போது சுவாரஸ்யமான நாவல்களைப் படிப்பது போல அவ்வளவு சந்தோஷமாயிருக்கும். நீ கோபித்துக் கொள்ளாமலிருந்தால் ஒரு விஷயம் சொல்கிறேன். உன்னுடைய கடிதங்களை இவருக்குக்கூட நான் படித்துப் பார்க்கும்படி கொடுப்பதுண்டு..." "ஐயையோ! என்ன வெட்கக்கேடு! இப்படி நீ செய்வாய் என்று தெரிந்திருந்தால் எழுதியிருக்கவே மாட்டேன்!" என்றாள் சீதா. "எதற்காக இவ்வளவு பதற்றப்படுகிறாய்? இப்போது என்ன முழுகிப் போய்விட்டது. உன்னுடைய கடிதங்களைப் படித்து இவர் எவ்வளவோ சந்தோஷப்பட்டிருக்கிறார். இன்னொன்று கூடச் சொல்கிறேன், கேள்! உன்னுடைய கடிதங்களை அவர் படித்ததினால்தான் என்னிடம் அவருடைய அலட்சியம் நீங்கி அன்பாக நடந்துக்கொள்ளத் தொடங்கினார் என்று எனக்குச் சில சமயம் தோன்றும்." "அந்தவரையில் என் கடிதங்கள் உனக்கும் பிரயோஜனமாயிருந்தது பற்றிச் சந்தோஷந்தான்!" "ஆனால் உன்னுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்பதை நினைத்தால் மிகவும் வருத்தமாயிருக்கிறது, அத்தங்கா! அவருக்கு ஏன் அப்படிப் புத்தி மாறியது! பெண்ணாய்ப் பிறந்தவள் யாரோ ஒருத்தியைப் பற்றிச் சொன்னாயே? அந்தப் பாதகி யார்? அவள் பெயர் என்ன?" "அவள் பெயர் தாரிணி!"

"தாரிணியா! சூரியா அவளைப் பற்றிக்கூட எழுதியிருந்தானே? அவள் ரொம்ப சாமர்த்தியக்காரி, உபகாரி, அப்படி இப்படி என்று. உன்னுடைய உயிரை ஒரு தடவை அவள் காப்பாற்றினாள் என்று எழுதியிருந்தானே!" "சூரியா உத்தமமான பிள்ளை, அவனுடைய மனது ரொம்ப நல்ல மனது. வெளுத்ததெல்லாம் பால் அவனுக்கு. அதனால் தாரிணியைப்பற்றி 'ஆ! ஹூ!' என்கிறான். அவளுடைய உண்மையான குணம் அவனுக்குத் தெரியாது." "அப்படியானால் அவள் ரொம்பப் பொல்லாதவளா?" என்று லலிதா கேட்டபோது சீதா சிறிது நிதானித்துவிட்டுக் கூறினாள்:- "தாரிணியைப் பொல்லாதவள் என்று நான் எப்படிச் சொல்ல முடியும்? அவள் எவ்வளவோ நல்லவள்தான். என்னை ஏரியில் முழுகிப் போகாமல் அவள் காப்பாற்றியது உண்மைதான். அது மட்டுந்தானா? கொடிய சுரத்தில் வீழ்ந்து யமனோடு நான் போராடிக்கொண்டிருந்த சமயத்தில் அவள்தான் எனக்குச் சிசுருஷை செய்து காப்பாற்றினாள். அவளும் நானும் தனியாக இருக்கும்போது அவளை என் உடன் பிறந்த சகோதரி என்றே எண்ணத் தோன்றும். உன்னைக்காட்டிலும்கூட அதிகமான அன்பு அவளிடம் எனக்கு உண்டாகும். அவளை விட்டு ஒரு நிமிஷ நேரமும் பிரிந்திருக்க மனம் வராது. வாழும்போது சேர்ந்தாற்போல் வாழ்ந்து சாகிறபோது சேர்ந்து சாகவேண்டும் என்று எண்ணிக் கொள்வேன். அந்த மாதிரி அவளிடமே சொல்லியும் இருக்கிறேன். ஆனால் என்னுட