கடலுக்குள்ளே...
கடலுக்குள்ளே...
ஒரு வாசகனாக, பார்வையாளனாக நான் காணமல் போய்விட்டேன்.பிரச்சனை அலைகள் என்னை அமிழ்த்தி விட்டன. என்னை ஈன்றெடுத்து ஆளாக்கிய சமூகம் இன்று கடலுக்குள்ளே.
ஒரு சமூக வளர்ச்சி ஆர்வலனாக எனக்குள் குற்ற உணர்ச்சிகள் என்னை மட்டுமல்ல, வளர்ச்சி ஆர்வலர்கள் என்று அடையாளம் கூறிக்கொள்ளும், குறிப்பாக சமீபத்திய ஆழிப்பேரிடருக்குப் பிந்தைய தீவிர வளர்ச்சி ஆர்வலர்கள், மீனவர்களின் பாதுகாவலர்களாகக் காட்டிக்கொள்பவர்கள், இவர்களின் பணிகளை எல்லாம் ஒருங்கிணைக்கின்றேன் பேர்வழி என்று களம் புறப்பட்ட அனைவருக்கும், இன்னூல் ஒரு சவால் விடுத்துள்ளது. கடல் சார் இனத்தின் பிரச்சனைகளுக்கு நிரந்தரமாக தீர்வு காண என்ன முயற்சி எடுக்கப்போகிறீர்கள் என்று நேரிடை சவாலாகவே இந்நூலின் பகுதிகள் அமைந்துள்ளன.
சற்றே விலகி அணுகினோமானால், கடல் சார் இனங்களின் நடுவில் பணியாற்ற பணித்தளங்களை உருவாக்கித் தந்திருக்கிறது இந்நூல்.
அறிவு ஜீவிகளின் 'கனவுகள்' தீர்வுகளை தராத நிலையில், ஒரு கடல் மகன் தனது அனுபவங்களிலிருந்து, தீர்வுகளுக்கான தேடல்களை முன்வைக்கிறார்.இந்நூலில்."அப்பத்தையன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்.'' என்று இயேசு மொழிந்தது போல, 'கனவுகளையன்று செயல்பாடுகளே தேவை '' என்று உணர வைத்திருக்கின்றார் பெர்லின்.
பல நிகழ்வுகளை, குழந்தைகளை மையப்படுத்தியே, கூறும் ஆசிரியரின் அணுகுமுறை சிறப்பானது.
''நான் படிக்கணும்
''அண்ணே! சைக்கிள நான் தள்ளட்டா...''
''அப்பா! நீயாப்பா இப்படி செஞ்ச..."
''அப்பா! இனிமே யாரு யூனிபார்ம் வாங்கித் தருவா...அப்பா..."
"அம்மா, ஆப்பிள் திராட்சை எங்கேமா..."
"கப்பல் எங்கள நெருங்கிண்டு வருது... எங்க உசிரும் கொஞ்சம் கொஞ்சமா பிரிஞ்சிண்டு போகுது..."
"எந்த உபயோகமும் இல்லாத, காலில்லாத நானும், இரண்டு காலும் ஒடஞ்ச இயேசு சொரூபமும் தான் மிச்சம்".
"சிமெண்ட் தரையில் பனியிலும், குளிரிலும் கொசுக்கடியிலும் தலைக்கு கைவைத்து படுத்துக்கிடப்பான்"
இந்த அத்தனை ஏக்கங்களும், குறைகளூம் தீர்த்து வைக்கப்பட வேண்டும். நூல் ஆசிரியரின் ஆதங்கம் உங்கள் செவிகளில் விழுகிறதா?
-ரெஜி.